10 ஆயிரம் பவுன் நகைகளை சுருட்டிய கணவன்- மனைவி கைது!
நாகப்பட்டினம்: நகைக்கு பணம் தருவதாக கூறிய 10000 பவுன் தங்க நகைகளை மோசடி செய்த கணவன், மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மேலக்காவேரி பகுதியைச் சேர்ந்தவர்கள் தமிமுன்அன்சாரி - பாத்திமா தம்பதி. தங்க நகைகளை தங்களிடம் கொடுத்தால் மாதந்தோறும் பணம் தருவதாகவும், ஒரு பவுனுக்கு ரூ.ஆயிரம் தருவதாகவும், கேட்கும் நேரத்தில் தங்க நகைகளை பணத்துடன் திருப்பி தந்துவிடுவதாகவும் கூறி இவர்கள் தொழில் நடத்தி வந்தனர்.
இதனை உண்மையென நம்பிய மயிலாடுதுறை கிளியனூர், வடகரை, சிதம்பரம், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பெண்கள், தங்களின் வீட்டில் இருந்த தங்க நகைகளை அவர்களிடம் கொடுத்தனர்.
முதலில் பெண்களிடம் தங்க நகைகளை வாங்கி அதை தனியார் வங்கிகள், பெரிய நிதி நிறுவனங்களில் அடகு வைத்து மாதந்தோறும் பணமாக கொடுத்துள்ளனர். இதை நம்பி மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த மேலும் பல பெண்கள் தமிமுன்அன்சாரி மற்றும் பாத்திமாவிடம் தங்க நகைகளை கொடுத்தனர்.
பின்னர் இருவரும் மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் முகவர்களை நியமித்து தொழில் நடத்தினர். இதில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் 10 ஆயிரம் பவுன் மதிப்புள்ள தங்க நகைகளை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தங்க நகைகளை கொடுத்த பெண்களுக்கு பணம் கிடைக்கவில்லை. நகைகளைக் திருப்பிக் கேட்டும் அதில் பதில் கூறவில்லை இந்த தம்பதியர். அப்போதுதான் இருவரும் தங்க நகைகளை பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்கள் நாகை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில், பாத்திமா - தமிமுன்அன்சாரி ஆகியோர் தங்க நகைகளை பெற்றுக்கொண்டு பணம் கொடுத்தது பற்றியும், பின்னர் நகைகளை திருப்பி தராமல் ஏமாற்றியது பற்றியும் கூறி இருந்தனர். பின்னர் இது தொடர்பாக நாகை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தியிடம் புகார் அளிக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்துக்கு சென்று நகை மோசடி குறித்து புகார் அளித்தனர்.
இந்த நிலையில் 10 ஆயிரம் பவுன் தங்க நகைகளை மோசடி செய்ததாக புகார் கூறப்பட்ட பாத்திமா சென்னை டி.ஜி.பி. அலுவலகத்துக்கு சென்று புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் தனது கணவர் தமிமுன்அன்சாரி கடத்தப்பட்டு விட்டதாக கூறி இருந்தார். இந்த புகார் மனு கூடுதல் டி.ஜி.பி. ராஜேந்திரனிடம் அளிக்கப்பட்டது.
அதேசமயம் பொதுமக்கள் அளித்த மோசடி புகார் தொடர்பாக நாகை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் சனிக்கிழமை இரவு கும்பகோணத்தில் இருந்த பாத்திமா, அவருடைய கணவர் தமிமுன்அன்சாரி ஆகியோரை நாகை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து நாகைக்கு கொண்டு வந்தனர். இதிலிருந்து கணவரை கடத்திவிட்டதாக பாத்திமா பொய்யாக புகார் கொடுத்தது தெரியவந்தது.
இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் 10000 பவுன் நகைகளை மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த காவல்துறையினர் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications