தலைமைச் செயலகத்தில் தம்பதியர் தீக்குளிக்க முயற்சி: அமைச்சர் மிரட்டுவதாக புகார்
சென்னை: தலைமைச் செயலகத்தில் முதல்வரின் கார் நிறுத்துமிடம் அருகே அதிமுக முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் தன் மனைவியுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் கொலைமிரட்டல் விடுப்பதாக அவர்கள் புகார் கூறியுள்ளனர்.

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று சட்டசபையின் நடவடிக்கைகளை காண மக்கள் திரண்டு வந்திருந்தனர். சட்டசபை நிகழ்வில் கலந்துகொள்ள முதல்வர் ஜெயலலிதா வந்தபின், அதிகாரிகள் பார்வையாளர்களை கண்காணித்தபடி இருந்தனர்.
பிற்பகல் 12 மணியளவில் முதல்வரின் கார் நிறுத்தப்படும் போர்டிகோ அருகே ஒரு தம்பதி, திடீரென தங்களிடமிருந்த சிறிய கேனில் இருந்த மண்ணெண்ணெயை தங்கள் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். இதைக்கண்ட காவல்துறையினர் பதறியடித்தபடி அவர்களை தடுத்து, அவர்களிடமிருந்து கேனை பிடுங்கி எறிந்தனர். உடனடியாக அவர்களை முதலுதவிக்கு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.

விசாரணையில் அவர்கள் தருமபுரி மாவட்டம் மோளையாணுரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி- கவிதா தம்பதியர் எனத் தெரியவந்தது. முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவரான அவரை, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரான பழனியப்பன், தனிப்பட்ட பகையின் காரணமாக கட்சிப்பதவியை பிடுங்கிவிட்டதோடு, தனது அதிகாரத்தைப்பயன்படுத்தி மாவட்ட ஆட்சியரின் மூலம் ஊராட்சிமன்றத் தலைவர் பதவியிலிருந்தும் தகுதிநீக்கம் செய்துவிட்டாராம்.

இதுகுறித்து முதல்வருக்கு புகார் மனு அளித்ததற்காக அமைச்சரும், அவரது உறவினர்களும் தங்களை கொலை செய்துவிடுவதாக மிரட்டுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் இதுதொடர்பாக இன்று முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து மனு அளிக்க வந்ததாகவும், ஆனால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாலேயே தீக்குளிக்க முயன்றதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர், தன் மனைவியோடு தீக்குளிக்க முயன்ற சம்பவம் தலைமைச் செயலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications