அமெரிக்கக் கப்பலில் கைதான 35 பேருக்கும் நிபந்தனை ஜாமீன்: கோர்ட் உத்தரவு
தூத்துக்குடி: கைது செய்யப்பட்டு 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்படாதக் காரணத்தால் அமெரிக்கக் கப்பலில் கைது செய்யப்பட்ட 35 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி, தூத்துக்குடி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
இந்தியக் கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்ததற்காக கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி அமெரிக்கக் கப்பல் ஒன்று சிறைபிடிக்கப் பட்டது. இந்த வழக்கில் கைது கைது செய்யப்பட்ட 35 பேரில் 12 பேர் இந்தியர்கள் என்பதால் அவர்கள் பாளையங்கோட்டை மத்திய சிறையிலும் உக்ரைன், இங்கிலாந்து, எஸ்தோனியா ஆகிய வெளிநாட்டைச் சேர்ந்த 23 பேர் சென்னை புழல் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அதன்படி, சென்னையில் உள்ள 23 பேரும் வியாழக்கிழமை மாலை விடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது, 60 நாள்களுக்குள் க்யூ பிரிவு போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால், அவர்களுக்கு ஜாமீன் வழங்குவதாக தூத்துக்குடி முதலாவது நீதித்துறை நடுவர்மன்ற நீதிபதி கதிரவன் உத்தரவிட்டார்.
மேலும், ஜாமீன் பெறும் 35 பேரும் தலா ரூ.10 ஆயிரத்தை வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும் எனவும், தூத்துக்குடி அண்ணா நகரில் உள்ள க்யூ பிரிவு காவல் நிலையத்தில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலும் இந்த ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கான உத்தரவு, இன்று பாளையங்கோட்டை மற்றும் சென்னை புழல் சிறையில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் என்றும், உத்தரவு கிடைத்ததும் 35 பேரும் ஜாமீனில் வெளியே வருவார்கள் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications