வண்டலூர் பாமக மாநாடு நடைபெறுவதில் சிக்கல்: ஹைகோர்ட் இடைக்கால தடை...
சென்னை: வண்டலூரில் பாட்டாளி மக்கள் கட்சி மாநாடு நடத்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் மாநாட்டுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலூரில் உள்ள வி.ஜி.பி. மைதானத்தில், வருகிற பிப்ரவரி மாதம் 14ம்தேதி மாநில மாநாடு நடத்த பா.ம.க. முடிவு செய்தது. இதற்காக அந்த நிலத்தின் உரிமையாளரிடம் தடையில்லா சான்றிதழும் பெறப்பட்டது. பின்னர், மாநாடு நடத்த போலீசில் அனுமதி கேட்டு மனு கொடுக்கப்பட்டது. மனுவை பரிசீலித்த போலீசார், தனியார் நிலத்தை மாநாடு நடத்துவதற்கு பயன்படுத்த வேண்டும் என்றால், வருவாய் துறையிடம் அனுமதிப்பெற வேண்டும் என்று உத்தரவிட்டார்கள்.
இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் பாம.க. மாநில துணை பொதுச்செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலம் தொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளதால், வருவாய் துறையிடம் அனுமதி பெற வேண்டும் என்று உத்தரவிட்டதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், நிலம் தொடர்பான வழக்கில், நிலத்தை பயன்படுத்த யாருக்கும் தடை விதிக்கவில்லை. எனவே, மனுதாரர் மாநாடு நடத்த போலீசார் அனுமதிக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மனு நீதிபதிகள் சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, வேணுகோபால் ஆகியோர் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, நிலம் தொடர்பாக இந்த உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குடன் சேர்ந்து, இந்த மேல்முறையீட்டு மனுவை சேர்த்து விசாரிப்பதாக உத்தரவிட்டார்கள். இந்த நிலையில், இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அனைத்து வழக்குகளையும் விசாரித்த நீதிபதிகள், நிலம் கஸ்தூரி அண்டு சன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது. இந்த நிலத்தை உச்சவரம்பு சட்டத்தின் கீழ் அரசு எடுத்துள்ளது. இதை எதிர்த்து அந்த நிறுவனம் தொடர்ந்த வழக்கு கீழ் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. இதற்கிடையில், அரசு ஆர்ஜிதம் செய்த நிலம் தனக்கு விற்பனை செய்துள்ளதாக வி.ஜி.பி. நிறுவனம் கீழ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தனி நீதிபதி மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக் கொண்டுள்ளார். அதை எதிர்த்து அரசு மேல் முறையீடு செய்துள்ளது. அப்போது, இந்த நிலத்தை தமிழக அரசோ, வி.ஜி.பி. நிறுவனமோ பயன்படுத்தக் கூடாது. அந்த நிலத்தின் வடிவத்தை மாற்றக்கூடாது என்று உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. ஆனால், தற்போது மாநாடு நடத்த வி.ஜி.பி. நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது நீதிமன்ற உத்தரவை அவமதிப்பு செய்வதாக உள்ளது என்று கருத்து தெரிவித்தனர்.
அப்போது வி.ஜி.பி. நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வக்கீல், நிலத்தில் மாநாடு நடத்த எந்த ஒரு அனுமதியையும் வழங்கவில்லை என்று கூறினார். இதையடுத்து நீதிபதிகள், ‘நிலத்தை யாரும் பயன்படுத்தக்கூடாது என்று உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், அந்த நிலத்தில் மாநாடு நடத்த அனுமதிக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கேள்விக்கு தீர்வு காணும் வரை, அந்த நிலத்தில் மாநாடு நடத்த பா.ம.க.வை சேர்ந்தவர்கள் எந்த ஒரு பணியையும் மேற்கொள்ளக்கூடாது. விசாரணையை வருகிற வெள்ளிக் கிழமைக்கு தள்ளிவைக்கிறோம்' என்று உத்தரவிட்டுள் ளார்.
உயர்நீதிமன்றத்தின் இடைக்கால தடையால் திட்டமிட்டது போல பிப்ரவரி 14ம் தேதி பாமக மாநாடு வண்டலூரில் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.