ஜெ. தொடர்ந்த அவதூறு வழக்கு: அக்.1-ல் ஆஜராக இளங்கோவனுக்கு கோர்ட் சம்மன்
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அக்டோபர் 1-ந் தேதியன்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னைக்கு கடந்த 7-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்திருந்தார். அப்போது முதல்வர் ஜெயலலிதாவை அவரது இல்லத்துக்கு சென்று பிரதமர் மோடி சந்தித்தார்.
இது தொடர்பாக கடந்த 14-ந் தேதியன்று இளங்கோவன் தெரிவித்த கருத்து சர்ச்சைக்குள்ளானது. இதனால் அவருக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.
இந்நிலையில் இளங்கோவன் மீது முதல்வர் ஜெயலலிதா தரப்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இம்மனுவை இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரித்தது.
இதன் பின்னர் வரும் அக்டோபர் 1-ந் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் புதிய தலைமுறை தொலைக்காட்சி நிர்வாகிகளும் ஆஜராக நீதிமன்றம் சம்மன் அனுப்பி வைத்துள்ளது.
ஏற்கெனவே காமராஜர் அரங்க ஊழியர் வளர்மதி கொடுத்த புகாரின் மீதான வழக்கில் இளங்கோவன் முன் ஜாமீன் பெற்று மதுரை போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார். தற்போது அவதூறு வழக்கிலும் அவர் நீதிமன்ற படிகளேற சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.