இ.கம்யூ. வேட்பாளர் சி.மகேந்திரன் வேட்புமனு தாக்கல்: தேர்தல் அதிகாரியுடன் வாக்குவாதம்
சென்னை: ஆர்.கே. நகர் தொகுதிக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிடும் மகேந்திரன் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார். மனு தாக்கல் செய்யும் போது தேர்தல் அதிகாரிக்கும், மகேந்திரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பெரிய கட்சி என்று பார்த்தால் இந்திய கம்யூனிஸ்ட் மட்டுமே போட்டியிடுகிறது. அக்கட்சியின் வேட்பாளராக சி.மகேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த மகேந்திரன், தனது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரியிடம் வழங்கினார். அதனை வாங்கிய தேர்தல் அதிகாரி, வேட்பாளரின் பெயரில் வங்கி கணக்கு வேண்டும் என்றும், ஆனால் அது தொடர்பான ஆவணம் இணைக்கப்படவில்லை என்றும் கூறி மனுவை ஏற்க மறுத்தார்.

அதிகாரியுடன் வாக்குவாதம்
ஆனால் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர்தான் வேட்பாளரின் வங்கி கணக்கு ஆவணம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும், இப்போதே எதற்கு கேட்கிறீர்கள்? என்றும் கூறி மகேந்திரன் தேர்தல் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

வங்கிகணக்கு ஆவணம்
இதனையடுத்து தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த மகேந்திரன், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது வங்கி கணக்கு ஆவணத்தை தேர்தல் அதிகாரி கேட்பதாகவும், இன்னும் சற்று நேரத்தில் உரிய ஆவணத்தை சமர்ப்பித்து வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.

வேட்புமனு தாக்கல்
இதனைத் தொடர்ந்து சற்று நேரம் அங்கு காத்திருந்த மகேந்திரன், வங்கி கணக்கு ஆவணம் வந்தவுடன் தனது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்தார்.

தீவிர பிரச்சாரம்
இன்று வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து இடைத் தேர்தலில் தீவிரப் பிரசாரம் செய்து வாக்கு சேகரிக்க இந்திய கம்யூனிஸ்ட்டும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டும் முடிவு செய்துள்ளன. அதிமுக அரசின் ஊழல்கள் குறித்து பிரதானமாக மக்களிடம் பிரசாரம் செய்யவும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் திட்டமிட்டுள்ளன.












Click it and Unblock the Notifications