ரயில் மறியல் செய்த எம்.எல்.ஏ பாலகிருஷ்ணன்... அடித்து பல்லை உடைத்த போலீஸ்
கடலூர்: சிதம்பரம் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ கே.பாலகிருஷ்ணன் மீது போலீஸார் நடத்திய தடியடி தாக்குதலில் அவரது பல் உடைந்தது. நெஞ்சுவலியால் மயக்கமடைந்த அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது, தொழிலாளர் நலச்சட்டங்களை தொழிற்சாலைகளில் அமல் படுத்துவது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, புதன்கிழமையன்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்த போராட்டத்தில் அனைத்திந்திய தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஈடுபட்டனர்.
தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலுார் எம்.எல்.ஏ பாலகிருஷ்ணன் சிதம்பரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுடன் ரயில் மறியலில் ஈடுபட்டார்.
அப்போது போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளுமுள்ளானது. போலீஸாரை கண்டித்து எம்.எல்.ஏ பாலகிருஷ்ணன், ரயில் நிலைய தரையில் படுத்தபடி போராட்டத்தை தொடர்ந்தார். இதனால் ஆத்திரமடைந்த போலீஸார், எம்.எல்.ஏ பாலகிருஷ்ணனை கடுமையாக தாக்கியதாக தெரிகிறது. மேலும் அவரை ரயில் நிலையத்திலிருந்து குண்டுகட்டாக தூக்கி வந்து வெளியில் போட்டனர்.இதில் எம்.எல்.ஏ பாலகிருஷ்ணனின் பல் உடைந்தது.
உடனே பாலகிருஷ்ணனுக்கு நெஞ்சுவலி வரவே அவர் மயக்கமடைந்தார். இதனையடுத்து அவர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அங்கு பதற்றம் உருவானது.
எம்.எல். ஏ வை தாக்கிய போலீஸாரைக் கண்டித்து முழக்கமிட்டபடி கட்சித்தொண்டர்களும், பொதுமக்களும் மருத்துவமனை முன்பு பெருமளவில் திரண்டதால் அப்பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.