முழு அடைப்பில் சட்டம் ஒழுங்கு சீர்கெட பாஜக திட்டம் வைத்துள்ளதா… முத்தரசன் கேள்வி
நாளை நடைபெறும் முழு அடைப்பின் போது சட்டம் ஒழுங்கு சீர்கெடும் என்று தமிழிசை கூறியதற்கு முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெறும் நாளை தமிழகத்தில் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் இந்தப் முழு அடைப்பு போராட்டத்திற்கு அனைத்து தரப்பினர் ஆதரவு அளித்துள்ளனர்.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.
விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள், தொழிற்சங்கங்கள், காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் சார்பில் ஏப்ரல் 25-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
பாஜக எதிர்ப்பு
விவசாயிகளின் போராட்டத்திற்கு தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வந்த பாஜக தலைவர் தமிழிசை, அவர்களுக்காக நடைபெறும் இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சட்டம் ஒழுங்கு
மேலும், நாளை நடக்கும் கடையடைப்பு போராட்டம் தமிழக மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்றும் தமிழிசை கூறினார். இது தேவையற்ற போராட்டம் என்றும் இதில் திமுக ஆதாயம் தேடப்பார்க்கிறது என்றும் அவர் கூறினார்.
கண்டனம்
இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்று தமிழிசை கூறியுள்ளதால், போராட்டத்தின் போது அசம்பாவிதங்கள் ஏதும் நடத்தும் திட்டத்தை பாஜக வைத்துள்ளதா என்று முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒத்துழைப்பு
விவசாயிகளுக்காக நடைபெறும் இந்தப் போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்று விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்க வேண்டும். இந்தப் போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்றும் முத்தரசன் கேட்டுக் கொண்டுள்ளார்.