கள்ளக்குறிச்சி மாணவி மரணத்திற்கு நீதிகேட்டு ஆகஸ்ட் 5-ல் போராட்டம்.. சிபிஎம் அறிவிப்பு
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாணவியின் இறப்புக்கு நீதிகேட்டு, ஆகஸ்ட் 5-ஆம் தேதி விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கணியாமூரில் இயங்கிவந்த தனியார் பள்ளியில், 12-ம் வகுப்பு படித்துவந்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தால், காவல்துறையினரின் வாகனங்கள், பள்ளி நிர்வாகத்தின் பேருந்துகளும், இதர வாகனங்களும், பள்ளி வளாகமும் போராட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டது. இந்தக் கலவரம் தொடர்பாக, சிறப்புப் புலனாய்வுக்குழுவினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றன.

இந்தக் கலவரம் தொடர்பாக இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் குறிப்பிட்ட அளவிலான சிறார்களும் அடங்குவர். மேலும், இந்தக் கலவரத்தின்போது அந்தப் பகுதியில் செல்ஃபோன் நெட்வொர்க் மற்றும் சாலை நடுவே உள்ள சிசிடிவி கேமராக்களைக் கொண்டு ஆய்வு மேற்கொண்டுவரும் போலீஸார், அடுத்தடுத்த கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாணவியின் இறப்புக்கு நீதிகேட்டு, ஆகஸ்ட் 5-ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கள்ளக்குறிச்சியில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியவதாவது: கள்ளக்குறிச்சி கனியாமூர் ஸ்ரீ சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் இறப்புக்கு நீதி கேட்டு போராடியபோது, தப்பு செய்யாத மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும். மேலும் உயிரிழந்த மாணவி தொடர்பாக அன்று அதிகாரியாக இருந்த மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி என பலரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரவேண்டும். பள்ளி நிர்வாகி பாஜக, ஆர்.எஸ்.எஸ் என்பதால் நாளுக்குநாள் காலதாமதம் செய்யப்படுகிறதா? என்ற பல்வேறு கேள்விகள் எழும்பி உள்ளன.
மாணவியின் மறு உடல்கூறு ஆய்வு பரிசோதனையின் போது மாணவியின் பெற்றோர்களை உடன் வைத்துக் கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டும், அதனை மீறி உடற்கூறு ஆய்வு செய்துள்ளனர். தொடர்ந்து புலன் விசாரணை செய்து, நீதிமன்றத்தில் உரிய தண்டனை வழங்க வேண்டும். மத்திய - மாநில அரசுகள், உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு 50 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும்.
மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு, வரும் ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்ட தலைநகர்களில், ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications