அதிமுக நிர்ப்பந்தத்தால் தனியார் பள்ளிகளை மூடுகிறார்கள்.. சிபிஎம் புகார்
சென்னை: அதிமுக பொதுச் செயலாளருக்கு ஆதரவாக ஸ்டிரைக் நடத்துமாறு ஆளுங்கட்சி தரப்பிலிருந்து வந்த நெருக்கடி மற்றும் நிர்ப்பந்தம் காரணமாக அக்டோபர் 7ம் தேதி தனியார் பள்ளிகளை மூடுவது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் செயல்படும் தனியார் பள்ளிகள் அக்டோபர் 7-ந் தேதியன்று மூடப்படும் என்றும், பள்ளி நிர்வாகிகளும், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களும் பள்ளிக் கல்வித்துறை அலுவலகங்கள் முன்பு ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாகவும், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு நிர்வாகி தெரிவித்துள்ளார். இது கடும் கண்டனத்திற்குரியது.
போராட்டம் நடத்தும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் தனியார் பள்ளிகள் அறிவித்துள்ள போராட்டம், மாணவர்கள் நலனோ, ஆசிரியர்கள் நலனோ, கல்வித்துறை கோரிக்கையோ சம்பந்தப்பட்டது அல்ல. பொதுநலனும் சம்பந்தப்பட்டதும் அல்ல. மாறாக நீதிமன்றத்தால் ஊழலுக்காக தண்டிக்கப்பட்ட ஒருவருக்கு ஆதரவாக அரசியல் மற்றும் சுயநோக்கங்களுக்காக நடத்தப்படுவதாகும். இது ஜனநாயகத்திற்கும், பொதுநலன் சார்ந்த விழுமியங்களுக்கும் எதிரான செயலாகும். இது மோசமான முன்னுதாரணத்தை உருவாக்கிவிடும்.
தமிழக அரசு நிர்வாகம் இதை வேடிக்கைப் பார்த்து கொண்டிருக்கக் கூடாது. நீதிமன்றத்தை நிர்பந்திக்கும் நோக்கோடு தமிழகம் முழுவதும் வியாபாரிகள், உற்பத்தியாளர்கள், தனியார் பேருந்து உரிமையாளர்கள், ஆம்னி பஸ் உரிமையாளர்கள், கேபிள் ஆப்ரேட்டர்கள் என்று ஒவ்வொரு பகுதியினரையும் ஆளும் கட்சியினர் மிரட்டலின் மூலம் வேலைநிறுத்தம் செய்ய தொடர்ந்து கட்டாயப்படுத்துகின்றனர். இந்த நடவடிக்கைகள் ஊழலுக்கு எதிரான நீதிமன்றத் தீர்ப்பை சிறுமைப்படுத்துவதும், சீர்குலைப்பதும் ஆகும்.
எனவே, அரசு நிர்வாகம் உரிய முறையில் தலையிட்டு ஆளுங்கட்சியினரின் மிரட்டல்களையும், தனியார் பள்ளி நிர்வாகங்களின் பள்ளிமூடல் நடவடிக்கையையும் தடுத்து நிறுத்த வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வற்புறுத்துகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.