நெல்லை அருகே கோவில் திருவிழாவில் பட்டாசுகள் வெடித்து சிதறி ஒருவர் பலி, 3 பேர் படுகாயம்!
நெல்லை அருகே புரட்டாசி திருவிழாவின் போது பட்டாசு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
திருநெல்வேலி : நெல்லை சுரண்டை அருகிலுள்ள கடையாலுருட்டி கிராமத்தில் புரட்டாசி திருவிழா வானவேடிக்கையின் போது பட்டடாசுக்குவியல் வெடித்து சிதறியதில் ஒருவர் உயிரிழந்தார்.
நெல்லை மாவட்டம் சுரண்டை அருகிலுள்ள கடையாலுருட்டி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் புரட்டாசித் திருவிழா நடைபெற்று வருகிறது. எட்டாவது நாளான நேற்று சப்பர பவனி நடைபெற்றது. இன்று அதிகாலை 4.30 மணிக்கு சப்பர பவனி நிறைவு பெறும் போது ஊருக்கு ஒதுக்கு புறமாக வான வேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது.

சுரண்டையை சேர்ந்த கணபதி என்பவர் இந்த வானவேடிக்கையை நடத்தியுள்ளார். அப்போது எதிர் பாராத நேரத்தில் வான வெடி குவித்து வைத்து இருந்த வெடிகள் மீது தீப்பொறி பட்டது. இதில் பட்டாசு குவியல் வெடித்து சிதறியதில் கணபதி உடல் கருகி உயிரிழந்தார். இந்த வெடி விபத்தின் போது கணபதியுடன் இருந்த சுரேஷ், ராம்குமார், ராஜேஷ் ஆகிய 3பேர் படுகாயம் அடைந்தனர்.
15க்கும் மேற்பட்டவர்கள் சிறு சிறு காயம் அடைந்தனர். மேலும் வெடி பொருள் குவித்து வைத்திருந்த சாலையின் ஓரத்தில் இருந்த தனியார் கட்டிடங்களும் சேதமடைந்தன. உடனடியாக சேர்ந்தமரம் போலீசார் விரைந்து வந்து இறந்தவர் உடலையும், காயம் பட்டவர்களையும் மீட்டு தென்காசி மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படகாயமடைந்த 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிகாலையில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை உருவாக்கி உள்ளது.












Click it and Unblock the Notifications