தோவாளை அருகே தண்டவாளத்தில் விரிசல்.. அதிர்ஷ்டவசமாக மிகப்பெரிய ரயில் விபத்து தவிர்ப்பு
தோவாளையில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதைப் பற்றி முன்னாள் ரயில்வே ஊழியரின் எச்சரிக்கையால் விபத்து தவிர்க்கப்பட்டது.
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை ரயில்நிலையம் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலைப் பார்த்த முன்னாள் ரயில்வே ஊழியர் ஒருவர் சிவப்புக்கொடி காட்டி எச்சரிக்கை தெரிவித்ததால் ஏற்படவிருந்த பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை ரயில் நிலையம் வழியாக இன்று மும்பை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்துசென்றபோது, ரயில் பாதை அருகே நிலத்தில் தோட்ட வேலை செய்துகொண்டிருந்தவர்களுக்கு பயங்கர சத்தம் கேட்டுள்ளது. இதனை அந்தவழியாக சென்ற முன்னாள் ரயில்வே ஊழியரிடம் தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, அந்த முன்னாள் ரயில்வே ஊழியர் தண்டவாளத்தில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டுள்ளதைப் பார்த்துள்ளார். அதே சமயம் தோவாளை ரயில் நிலையத்துக்கு கோவை ரயில் வருவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அவர் உடனடியாக தண்டவாளத்தில் சிவப்புக் கொடியை நட்டு ரயில் ஓட்டுநருக்கு எச்சரிக்கை தெரிவித்துள்ளார். இதைப் பார்த்த கோவை ரயில் ஓட்டுநர் ஏதோ பிரச்சனை என்று உணர்ந்து ரயிலை நிறுத்தியுள்ளார். இதனால், தோவாளை ரயில் நிலையம் அருகே ஏற்பட இருந்த பெரும் ரயில் விபத்து அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்டது.
இது குறித்து தோவாளையைச் சேர்ந்த ரயில் பயணி ஒருவர் ஊடகங்களிடம் கூறுகையில், தோவாளை ரயில் நிலையம் வழியாக நாகர்கோவிலில் இருந்து கோவை செல்லும் ரயில் வந்தது. அதற்கு முன்னாடி ரயில்கள் சென்றபோது, தண்டவாளத்தில் பயங்கர சத்தம் கேட்டது. இதை பயணிகளும் அப்பகுதியில் இருந்தவர்களும் பார்த்திருக்கிறார்கள். பின்னர், ரயில் நிலையத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிவப்புக்கொடி காட்டிய பிறகு கோவை ரயில் ஓட்டுநர் சாமர்த்தியமாக ரயிலை நிறுத்தினார்.
இந்த ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் கிடையாது. அதனால்தான் இப்படி தண்டவாளம் விரிசல் அடைந்ததுகூட அறியப்படாமல் இருந்துள்ளது. இது பற்றி தகவல் சொல்வதற்கு கூட ரயில் நிலையம் வசதிகள் செய்துகொடுக்காமல் உள்ளது. அதிர்ஷ்டவசமாக இன்று பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.
தோவாளை ரயில் நிலையம் அருகே தண்டாவாளத்தில் விரிசல் ஏற்பட்டது குறித்து அங்கிருந்தவர்கள் ஆரல்வாய்மொழி ரயில் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த ரயில்வே ஊழியர்கள் தண்டவாள விரிசலை சரிசெய்தனர்.
தண்டவாள விரிசல் சரி செய்யப்பட்ட பின்னர் மீண்டும் ரயில் சேவை தொடங்கியது. இதனால், அவ்வழியே செல்லும் கோவை, பெங்களூரு, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.