ஓரினச் சேர்க்கைக்கு மறுப்பு... நண்பரைக் கொன்று வீட்டுத் தோட்டத்தில் புதைத்தவர் கைது
கடலூர்: ஓரினச் சேர்க்கைக்கு மறுத்த தனியார் நிறுவன ஊழியரை நண்பரே கொன்று வீட்டுத் தோட்டத்தில் புதைத்த சம்பவம் கடலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூரை அடுத்த கோண்டூர் தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் நகரை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மகன் பொறியியல் பட்டதாரியான சதீஷ்குமார் (29), கடலூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வந்தார்.

இம்மாதம் 1-ந்தேதி வழக்கம்போல் பணிக்குச் சென்ற சதீஷ்குமார், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் நெல்லிக்குப்பம் போலீசில் புகார் அளித்தனர்.
போலீசாரின் விசாரணையில், சதீஷ்குமாரின் செல்போனுக்கு அவருடைய நண்பர் தினேஷ் கடைசியாக பேசியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தினேஷ் தலைமறைவாக இருப்பதும் தெரியவந்தது.
இந்நிலையில், நேற்று காலை தேவனாம்பட்டினம் கிராம நிர்வாக அதிகாரியிடம் தினேஷ் சரண் அடைந்தார். அப்போது போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் சதீஷைக் கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கடந்த 1-ந்தேதி அன்று வேலைக்கு சென்ற சதீஷ்குமார், இரவு மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது அவரை செல்போனில் தொடர்பு கொண்ட தினேஷ், தனது வீட்டுக்கு வருமாறு அழைத்தார். அதன்படி அவர், தினேஷ் வீட்டுக்கு சென்றார்.
பின்னர் அவர்கள் கடலூருக்கு சென்று சினிமா பார்த்து விட்டு மீண்டும் தினேஷ் வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு மது அருந்திய தினேஷ், சதீஷ்குமாரை ஓரினச் சேர்க்கைக்கு அழைத்துள்ளார். ஆனால், அதற்கு சதீஷ்குமார் மறுத்துள்ளார்.
இதனால், ஆத்திரம் அடைந்த தினேஷ் சதீஷ்குமாரைத் தாக்கியுள்ளார். அதில் படுகாயம் அடைந்த சதீஷ்குமார் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து, போலீசாருக்குப் பயந்து சதீஷ்குமாரின் உடலை வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் தினேஷ் புதைத்துள்ளார். அதோடு, சதீஷ்குமாரின் மோட்டார்சைக்கிளையும் தேவனாம்பட்டினம் அருகே முட்புதருக்குள் போட்டுவிட்டு சென்னைக்கு சென்று தலைமறைவாகி விட்டார் தினேஷ்.
பின்னர் ஊர் திரும்பிய அவர் போலீசார் தேடுவதை அறிந்ததும், கிராம நிர்வாக அதிகாரியிடம் சரண் அடைந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக சதீஷ்குமாரின் உடலைத் தோண்டி எடுத்து போலீசார் பிரேத பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications