கடலூரில் 5 நாட்களாக விடாமல் கொட்டும் மழை: வெள்ளத்தில் தவிக்கும் மக்கள்
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் ஐந்தாவது நாட்களாக கொட்டிவரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை புரட்டி போடப்பட்டுள்ளது.
கடலுார் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடைவிடாது பெய்து வரும் கனமழையால், குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. கடந்த 5 நாட்களில் மட்டும் 503 மில்லிமீட்டர் மழை கடலூரில் பதிவாகியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் நவம்பர் 8ம் தேதி தொடங்கிய மழை தெளியவிட்டு தெளியவிட்டு அடிக்கிறது. அதுவும் கடந்த 5 நாட்களாக விடாமல் கொட்டும் மழையால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்க இடமின்றி தவித்து வருகின்றனர். தாழ்வான பகுதிகளில் தேங்கியிருக்கும் நீரை அகற்றும் பணிகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்காக, வெளிமாவட்டங்களிலிருந்து 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், கடலுாருக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
கடலுாரில், புதன்கிழமை இரவில் மட்டும், 13.4 செ.மீ., மழை கொட்டி தீர்த்ததால், தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அனைத்து சாலைகளிலும் தண்ணீர் ஓடுவதால் எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை. இதனால், கடலுார் மாவட்ட மக்கள் இரண்டாவது நாளாக வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

20000 பேர் மீட்பு
கடலுார், கோண்டூர், பண்ருட்டி, நெய்வேலி, ஊமங்கலம், பீமாராவ் நகர், சுத்துக்குளம், உப்பலவாடி உள்ளிட்ட பகுதி களில், 10 ஆயிரம் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்துள்ளது; 20 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு, சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அபாய கட்டத்தை தாண்டிய ஆறுகள்
கடலுார் வழியாக ஓடுகின்ற கெடிலம் ஆற்றில், 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் செல்கிறது. பெண்ணையாற்றில் 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் செல்வதால் வெள்ளம் இருகரையையும் தொட்டு செல்கிறது. தொடர் மழை காரணமாக, வீராணம் ஏரியின் பாதுகாப்பு கருதி, வெள்ளியங்கால் ஓடையில் மொத்தமுள்ள, 16 ஷட்டர்களில், நான்கு ஷட்டர்கள் திறக்கப்பட்டு, 1,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

5 வது நாளாக மழை
வியாழக்கிழமை இரவு முழுவதும் மழை பெய்தது. இதனால் மக்கள் பீதியடைந்தனர். இந்நிலையில் இன்று காலை 10.30 மணி முதல் வெயில் அடித்தது.இதனால் பொது மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சுவிட்ட நேரத்தில், பகல் 12 மணிக்கு மீண்டும் கன மழை பெய்ய தொடங்கியது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் மேடான இடங்களுக்கு அழைத்து வரப்பட்டனர். இருப்பினும் திரும்பிய திசை எங்கும் வெள்ளக் காடாக காட்சி அளித்து வருகிறது.

வெள்ளம் சூழ்ந்த கடலூர்
கடலூர் பீச்ரோடு, வன்னியர்பாளையம், வண்ணாரப்பாளையம், ராதாகிருஷ்ணன்நகர், சாமிப்பிள்ளைநகர் ஆகிய பகுதிகளில் ரோட்டில் 2 அடி உயரத்துக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கே.என்.பேட்டை அசோக் நகர், வி.ஐ.பி.நகர், ராஜலட்சுமிநகர், குமாரப்பேட்டை சாலையோரம் உள்ள குடியிருப்பு பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

முடங்கிய கடலூர்
ஏற்கனவே மழை வெள்ளம் புகுந்த புருஷோத்தமன்நகர், ராம்நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் அருகில் வசிக்கும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர் மழையால் கடலூரில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. வணிக நிறுவனங்களும் மூடப்பட்டன. இதனால் பொதுமக்களின் நடமாட்டம் மிக குறைந்த அளவிலேயே இருந்தது.

பீதியில் மக்கள்
கடலூர் நகரில் மட்டும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த 14 முகாம்களில் 1500க்கும் மேற்பட்டவர்கள் தங்கி உள்ளனர். அவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து 5வது நாளாக விடாமல் பெய்து வரும் மழையால் கடலூர் நகர மக்கள் விடைபெறாத சோகத்தில் உள்ளனர்

மின் உற்பத்தி பாதிப்பு
கனமழையால் என்எல்சி சுரங்கத்தில் மழைநீர் புகுந்துள்ளது, மழை நீரை வெளியேற்றக் கூடிய ராட்சத பம்புகளும் நீரில் மூழ்கியுள்ளதால் மழைநீரை வெளியேற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பழுப்பு நிலக்கரி வெட்டியெடுக்கும் பணியும், பராமரிப்புப் பணிகளும் தடை பட்டுள்ளது. அனல்மின் நிலையங்களில் ஈரப்பதம் உள்ள பழுப்பு நிலக்கரியை பயன்படுத்துவதால் மின் உற்பத்தியின் அளவும் குறைந்துள்ளது.

நிவாரணப் பொருட்கள்
கடலூருக்கு மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் நிவாரணப் பொருட்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அவற்றை முறையாக விநியோகிக்கும் பணியும் நடந்து வருகிறது. ராம் நகர், ஆனந்த் நகர், தானம் நகர் பகுதிகளில் தேங்கியுள்ள நீரை வெளியேற்ற உள்ளாட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
|
உதவ முன்வந்த உள்ளங்கள்
கடலூரில் ஏற்பட்டுள்ள பேரழிவிற்கு ஏராளமானோர் உதவி வருகின்றனர். மயிலாடுதுறை ரோட்டரி சங்கங்களும் உதவி செய்ய முன்வந்துள்ளன. உதவி செய்பவர்கள் நிதி உதவி அளிக்கலாம் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

80 பேர் உயிரிழப்பு
கடந்த 8ம் தேதியிலிருந்து பெய்து வரும் கனமழைக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை நேற்று முன்தினம் வரை, 76 ஆக இருந்தது. ஆற்றில் மூழ்கியும், சுவர் இடிந்து விழுந்தும், நான்கு பேர் நேற்று இறந்ததால், மாவட்டத்தில் மழைக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை, 80 ஆக உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications