ராணுவ விமானத்தில் சென்னை வந்த 500 ரூபாய் நோட்டுக்கள்.. சில்லரை பிரச்சினை தீருமா?
சென்னையில் ரூபாய் நோட்டுகளுக்கு சில்லறைத் தட்டுப்பாடு விரைவில் தீர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை: 500,1000 ரூபாய் பழைய நோட்டுகளுக்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டு 2 ஆயிரம் ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டதால் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் பெரும் சில்லறைத் தட்டுப்பாடு நிலவி வந்தது. இது விரைவில் தீர்ந்து விடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் நாசிக்கில் இருந்து புதிதாக அச்சடிக்கப்பட்ட ரூ.500 நோட்டுகள் ராணுவ விமானத்தில் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டிருப்பதால் விரைவில் இங்கு சில்லறைத் தடுப்பாடு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை ஒப்பிடுகையில் சென்னையில் அதிக ஏடிஎம்கள் இருந்தாலும், கடந்த இரண்டு வாரங்களாக பெரும்பாலான ஏடிஎம்கள் செயல்படவில்லை. இதனால் தமிழக மக்கள் குறிப்பாக சென்னை வாசிகள் அன்றாடம் பெரும் இன்னல்களைச் சந்தித்து வந்தனர்.
மேலும், ஏடிஎம்களில் சிலவற்றில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 2000 ரூபாய் மட்டுமே கிடைத்ததால் மக்கள் சில்லறைக்காக கடும் அவதிக்குள்ளாயினர். கடந்த 2 நாட்களுக்கு முன்பே எஸ்பிஐ ஏடிஎம்களில் புதிய 500 ரூபாய் நோட்டுகள் கிடைத்தன. ஆனாலும், அவை போதுமானதாக இருக்கவில்லை.
இந்த நிலையில், நாகிச்சில் இருந்து சுமார் 14 டன் புதிய ரூ.500 நோட்டுகள் ராணுவ விமானத்தில் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டது. இரண்டு கண்டெய்னர்களில் கொண்டு வரப்பட்ட புதிய 500 ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்றும் நாளையும் வங்கிகள் விடுமுறை என்பதால், திங்கட்கிழமை முதல் வங்கி மற்றும் ஏடிஎம்களில் 500 ரூபாய் நோட்டுகள் வாடிக்கையாளர்களுக்கு அதிகளவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, திங்கட்கிழமை காலை முதல் சென்னையில் சில்லறைத் தட்டுப்பாடு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தகவல் சென்னை மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.