அதிக தேர்ச்சியால் எஞ்சினியரிங், மருத்துவ படிப்பு கட்-ஆப் மதிப்பெண்கள் உயரும் எனத் தகவல்
சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. கடந்த ஆண்டை விட இந்த வருடம் தேர்ச்சி விகிதம் மட்டுமின்றி பாட வாரியாக 200 க்கு 200 எடுத்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.
மருத்துவம், எஞ்ஜினீயரிங் போன்ற உயர் படிப்புகளில் சேருவதற்கான அடிப்படையாக உள்ள பாடங்களில் மாணவ, மாணவிகள் அதிக அளவில் மதிப்பெண்களை குவித்துள்ளனர்.

எஞ்ஜினீயரிங் கட்- ஆப் மதிப்பெண்ணை நிர்ணயிக்கும் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் கடந்த ஆண்டை விட 200 க்கு 200 அதிக அளவில் எடுத்துள்ளனர்.
கணிதம் பாடத்தில் 3882 பேர் 200க்கு 200 எடுத்துள்ளனர். இயற்பியல் பாடத்தில் 2710 பேரும், வேதியியல் பாடத்தில் 1693 பேரும் முழு மதிப்பெண்கள் எடுத்து உள்ளனர். கடந்த வருடத்தை காட்டிலும் இந்த ஆண்டு 4398 பேர் இந்த மூன்று பாடங்களிலும் 200க்கு 200 எடுத்துள்ளனர்.
இதனால் எஞ்ஜினீயரிங் கட்-ஆப் மதிப்பெண் ஒரு மதிப்பெண் அளவில் கூட வாய்ப்பு உள்ளது.உதாரணத்திற்கு ஒரு எஞ்ஜினீயரிங் கல்லூரியின் கடந்த ஆண்டு கட்-ஆப் மார்க் 198 ஆக இருந்தால் இந்த வருடம் 199 ஆக உயர வாய்ப்பு உள்ளது.
இதே போல எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மருத்துவ படிப்பில் சேருவதற்கான கட்-அப் மதிப்பெண்ணும் கூடுகிறது.மருத்துவ படிப்பில் சேருவதற்கான உயிரியல் பாடத்தில் மாணவர்களின் மதிப்பெண் கடந்த ஆண்டை விட சற்று குறைவாக இருந்தாலும் கூட இயற்பியல், வேதியியல் பாடங்களில் 200-க்கும் 200 பெற்றவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் மருத்துவ கட்-ஆப் மதிப்பெண் 0.5 சதவிதம் உயர வாய்ப்பு உள்ளது.
அதாவது அரசு மருத்துவ கல்லூரியில் கடந்த ஆண்டு கட்-ஆப் மார்க் 198 ஆக இருந்தால் இந்த வருடம் 198.5 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications