புயல் எதிரொலி... சென்னை, காஞ்சி, திருவள்ளூர், கடலூர், புதுவை பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
வர்தா புயல் மிரட்டலைத் தொடர்ந்து காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் நாளை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: வர்தா புயல் மிரட்டல் காரணமாக, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை ஒரு நாள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள அதி தீவிர வர்தா புயல் சென்னைக்கு வெகு அருகே நெருங்க வந்து கொண்டிருக்கிறது. இந்தப் புயலானது நாளை பிற்பகல் வாக்கில் சென்னைக்கு மிக மிக அருகே கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சென்னையிலேயே இது கரையைக் கடக்கலாம் என்றும் ஒரு கணிப்பு கூறுகிறது.

இதையடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை ஒரு நாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிக்கையை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பிறப்பித்துள்ளனர்.

இதேபோல புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரத்தில்
விழுப்புரம் மாவட்டத்தில் கடலோரத்தில் உள்ள தாலுகாக்களில் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications