குற்றாலம் குளிக்கப் போறீங்களா? ஹெல்மெட்டோட போங்கப்பா...
குற்றாலம்: குற்றாலத்தில் குளிக்கப் போகிறவர்கள் இனி ஹெல்மெட்டுடன்தான் போகவேண்டிடும் போலிருக்கிறது. ஏனெனில்
மெயினருவியின் மேல் பகுதியில் ஆபத்தான கற்கள் குவிந்து கிடப்பதால் குளிக்கும் பயணிகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
அருவிகள் நகரமான குற்றாலத்தில் ஆண்டுதோறும் சீசன் காலங்களில் தண்ணீர் ஆர்பரித்துக்கொட்டும். மூலிகை மணம் நிறைந்த அருவி நீரில் குளிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
மெயினருவி பல ஆயிரம் வருடம் பழமை வாய்ந்த இயற்கையான அருவி ஆகும். இந்த அருவியின் பிரமண்டத்தை பார்த்து அதிசயிக்காத சுற்றுலா பயணிகளே இல்லை என்று கூறலாம். சுமார் 50 அடிக்கும் மேல் உயரம் கொண்ட இந்த அருவியில் தண்ணீர் விழுந்த போதிலும் இதில் குளிப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

இயற்கையான அருவி
தண்ணீரின் அழுத்தம் அதிகமாக இல்லாத அளவுக்கு பாறையின வடிவம் இயற்கையாக அமைந்துள்ளதே இதற்கு காரணம. எத்தனையோ இடங்களில் உயரமான அருவிகள் இருந்தாலும் தண்ணீர் ஓரே அடியாக மேலிருந்து கீழே கொட்டுவதால் தண்ணீரின் அழுத்தம் அதிகமாக இருக்கும்.

பொங்குமாங்கடல்
குற்றாலம் மேலே உள்ள பொங்குமாங்கடல் என்னும் பகுதி தண்ணீரின் வேகத்தை கட்டுபடுத்தி பின்னர் பாறையில் வழித்தோடி அருவியாக கொட்டும் வண்ணம் இயற்கையாக அமைந்துள்ளது.

பாறை நிறைந்த அருவிகள்
இந்த பொங்குமாங்கடல் பகுதியில் 1992ம் வருடம் ஏற்பட்ட வெள்ள பெருக்கின் போது அடித்து வரப்பட்ட கற்கள் குவிந்து கிடக்கின்றன.
இந்த கற்கள் தண்ணீர் அதிகமாக விழும் காலத்திலோ அல்லது காற்று அதிகமாக வீசும் காலத்திலோ திடீரென்று கீழே விழுகின்றன.

சுற்றுலா பயணி பலி
கடந்த சில வாரங்களுக்கு முன்பு பொங்குமாங்கடலில் இருந்து கீழே விழுந்த கல் ஒன்று மதுரையை சேர்ந்த சுற்றுலா பயணி பாலகிருஷ்ணன் என்பவரது தலையில் விழுந்தது. ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

அச்சத்தில் பயணிகள்
இதன் பிறகும் பொங்குமாங்கடல் பகுதியில் விழுந்து கிடக்கும் பாறை துண்டுகளை அகற்ற நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் தூங்கி வருகின்றனர். இதனால் சுற்றுலா பயணிகள் உயிரை கையில் பிடித்து கொண்டு குளித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications