வழி தவறிப் போன மருமகள்: எரித்துக் கொன்ற மாமனார்- உளுந்தூர்பேட்டை விபரீதம்
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர் பேட்டையில் மருமகளின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டதால் மாமனாரே எரித்துக் கொன்ற சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர் கோட்டை சாது தெருவை சேர்ந்தவர் ஏழுமலை . இவரது மனைவி சத்யா . இவர்களுக்கு திருமணமாகி 5 வருடம் ஆகிறது.
இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ஏழுமலை சென்னையில் தங்கி வேலை செய்து வருகிறார். இதனால் சத்யா தனது குழந்தைகளுடன் மாமனார் வீட்டிலேயே வசித்து வந்தார்.
இதற்கிடையில் சரண்யா அதே பகுதியை சேர்ந்த சில வாலிபர்களுடன் பழகி வந்துள்ளார். இதனை அறிந்த ஏழுமலை மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து சத்யாவை கண்டித்தார். ஆனால் இதனையும் மீறி அந்த வாலிபர்களுடன் சத்யா பழகி வந்ததால் ஏழுமலை வீட்டுக்கு வராமல் சென்னையில் நிரந்தரமாக தங்கிவிட்டார்.
இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சத்யா அந்த வாலிபர்களை வீட்டுக்கே அழைத்து பேசி வந்தார். சம்பவத்தன்று இரவு அதுபோல் சத்யா அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் வீட்டில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது இதனை பார்த்து சத்யாவின் மாமனார் அரசன் கண்டித்தார்.
இதனால் சத்யாவுக்கும், அரசனுக்கும் இடையில் வாய் தகராறு ஏற்பட்டது. பல முறை கண்டித்தும் சத்யா கேட்காததால் ஆத்திரம் அடைந்த அரசன் வீட்டில் இருந்த மண்ணெண்ணைய்யை எடுத்து சத்யாவின் உடலில் ஊற்றி தீவைத்துவிட்டு ஓடிவிட்டார்.
இதில் உடல் முழுவதும் கருகிய நிலையில் சத்யாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையிலும், மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்ட சத்யா தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்றுஇரவு பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.