ஜல்லிக்கட்டு புரட்சி : ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளாய் ஒன்றிணைத்த மெரீனா
குடுக்குறத வாங்கிட்டு கும்பிடு போட்டு ஓட்டு போட்ட இனம்னு நினைச்சீங்களா தமிழன்டா... இனிமே இப்படித்தான் எல்லாத்துக்கும் ஒண்ணு சேருவோம் என்று ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் உலகத்திற்கே உணர்த்தியுள்ளனர்.
சென்னை: ஜல்லிக்கட்டுக்காக சமூக வலைத்தளம் மூலம் ஜனவரி 7ஆம் தேதி மெரீனாவில் ஒன்றிணைந்தனர் இளைஞர்கள். இந்த கனல் தமிழகத்தில் ஆங்காங்கே பரவியது. மதுரை, நெல்லை, கோவை என போராட்டக்களம் இளைஞர்களால் நிரம்பியது.
பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டு நடக்கும் என்று நம்பியிருந்த நிலையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க முடியாது என்று கூறவே, போராட்டம் ஜல்லிக்கட்டு புரட்சியாக மாறியது.

மெரீனா புரட்சி
ஜனவரி 16ஆம் தேதி அலங்காநல்லூரில் பற்றிய பெரு நெருப்பு, சென்னை மெரீனாவில் கனன்று விட்டு எரிகிறது. சென்னைவாசிகள் என்றாலே ஓட்டுப்போட கூட வராமல் வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பவர்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தனர். ஆனால் சாரை சாரையாக மெரீனாவில் குவிந்தனர். 100 பேருடன் தொடங்கப்பட்ட புரட்சி இரவுக்குள் லட்சம் பேரை எட்டியது.
|
ஒளிர்ந்த மெரீனா
மாணவர்கள் கூட்டத்தைக் கலைக்க இரவு விளக்கை அணைத்தாலும் செல்போன் மூலம் ஒளியூட்டி போராட்டத்திற்கு புது வடிவம் கொடுத்தனர் கடந்த நான்கு நாட்களாக இரவு பகலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

லைட்ஹவுஸ் தொடங்கி அண்ணா சதுக்கம் வரை
உலகின் மிக நீண்ட கடற்கரையான மெரீனாவில் மக்கள் வெள்ளம் அலைமோதி வருகிறது. போராட்ட களத்தின் 4வது நாளான நேற்று அண்ணா சதுக்கம் தொடங்கி களங்கரை விளக்கம் வரை மனிதத்தலைகளாவே காட்சியளித்தது.

தமிழன்டா
ஜல்லிக்கட்டு வேண்டும் என்ற முழக்கத்தோடு அரசியல்வாதிகளையும் சேர்த்து இதுநாள் வரை அடக்கிவைத்திருந்த கோபத்தை எல்லாம் இந்த போராட்டத்தில் வெளிப்படுத்தினர். எதிர்காலத்தில் என் குழந்தைகள் ஜல்லிக்கட்டு என்றால் கேட்கக்கூடாது என்பதற்காகவே இந்த போடத்தில் பெண்கள் பலரும் தங்களின் குழந்தைகளுடன் பங்கேற்றனர்.

காந்தி சிலை முன் அறப்போர்
விவேகானந்தர் நினைவு இல்லம் முன்பு மீடியாவின் ஒட்டு மொத்த கவனமும் உள்ளது. அங்கு சிலம்பாட்டம், கபடி , கானா பாட்டு என உற்சாகமாக போராட்டம் களைகட்டி வருகிறது. கடற்கரையில் மகாத்மா காந்தி சிலை முன்பு குவிந்திருந்த போராட்டக்குழுவினர். 'சின்னம்மா சின்னம்மா ஓபிஎஸ் எங்கம்மா' என்று கேட்டு முழக்கமிட்டனர்.

அடக்குனா அடங்குற ஆளா நீ
எங்களை யாராலும் அடக்க முடியாது. எங்களுக்குத் தேவை ஜல்லிக்கட்டு என்று முழக்கமிடும் மக்களுக்கு அவ்வப்போது உணவு, தண்ணீர், பிரட் பாக்கெட் அளித்து வருகின்றன. கீழே போடும் குப்பைகளை கைகளில் கிளவுஸ் அணிந்து கொண்டு உடனே அதை அகற்றினர். போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த ஒரு போர்ப்படை உள்ளது.

ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள்
ஆண்களைக் கண்டாலே அஞ்சி ஒதுங்கிப் போன பெண்கள் கூட ஒரே இடத்தில் அமர்ந்து ஒற்றுமையுடன் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். தவறிவிடும் குழந்தைகள் உடனடியாக பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டன. ஈவ் டீசிங், முட்டல் மோதல் எதுவும் இன்றி அன்பாய், பரிவாய் பலரும் அரவணைத்து சென்றதை கண்கூடாக காண முடிந்தது.

பயமில்லாத இரவு
8 மணிக்கு மேல் கடற்கரை பக்கம் எட்டிப்பார்க்காதவர்கள் கூட கடந்த 4 நாட்காள விடிய விடிய பெண்கள், குழந்தைகளுடன் அமர்ந்து போராடுகின்றனர். அவ்வப்போது வீடுகளுக்கு சென்று ஓய்வு எடுத்து விட்டு வந்து மீண்டும் போராட்டத்தை தொடர்கின்றனர். எங்களுக்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்காமல் இந்த இடத்தை விட்டு நகரமாட்டோம் என்று கூறி அசராமல் போராடி வருகின்றனர்.
மொத்தத்தில் ஜல்லிக்கட்டுக்காக தொடங்கிய புரட்சி, ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தி ஒருதாய் பிள்ளைகளாய் ஒருங்கிணைத்து இன்றைக்கு உலகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது என்றே கூறலாம்.












Click it and Unblock the Notifications