சட்டவிரோத தொலைபேசி இணைப்பு வழக்கு- தயாநிதி மாறனுக்கு ஹைகோர்ட் முன் ஜாமீன்- சிபிஐ கோர்ட்டில் ஆஜர்!!
சென்னை: சட்டவிரோதமாக தொலைபேசி இணைப்புகளை பயன்படுத்தியதாக சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால முன்ஜாமீன் வழங்கியது. இதனைத் தொடர்ந்து சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகி பிணைத் தொகை செலுத்தி முன்ஜாமீன் பெற்றார் தயாநிதி மாறன்.
மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது, 323 பிராட்பேண்ட் தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக தனது சகோதரர் கலாநிதி மாறனின் நிறுவனமான சன் டி.வி.க்கு வழங்கியதாக ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்துமாறு சி.பி.ஐ.க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து தயாநிதி மாறன், பிஎஸ்என்எல் பொது மேலாளராக இருந்த கே.பிரம்மநாதன், துணைப் பொது மேலாளராக இருந்த எம்.பி.வேலுச்சாமி ஆகியோர் மீது சி.பி.ஐ. போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக தயாநிதி மாறனின் தனிச் செயலாளராக இருந்த வி.கவுதமன், சன் டி.வி.யின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி எஸ்.கண்ணன், எலக்ட்ரீஷியன் எல்.எஸ்.ரவி ஆகியோரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.
பின்னர் இந்த மூவரும் ஜாமீனில் வெளிவந்தனர். இதனிடையே இந்த வழக்கில் தயாநிதி மாறனை நாளை ஆஜராகுமாறு சி.பி.ஐ. உத்தரவிட்டிருந்தது.
இதனால் தம்மை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தயாநிதி மாறன் மனுத்தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தயாநிதி மாறனுக்கு இன்று 6 வார கால இடைக்கால ஜாமீன் வழங்கியது.
இதனைத் தொடர்ந்து சென்னை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் இன்று தயாநிதி மாறன் ஆஜரானார். அங்கு பிணைத் தொகை செலுத்தி முன்ஜாமீன் பெற்றார்.












Click it and Unblock the Notifications