அதிமுக ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன... மாற்றத்துக்கு மக்கள் தயாராகி விட்டனர்: வைகோ
சென்னை: அதிமுக அரசின் நாட்களை மக்கள் எண்ணிக் கொண்டிருப்பதாகவும், வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்றும் மதிமுக பொதுச்செயலரும் மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி மதிமுக சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு மதிமுக பொதுச்செயலர் வைகோ பரிசு வழங்கினார்.

மதிமுகவினர் மதுவின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு போட்டிகள், மாரத்தான் மற்றும் போராட்டங்கள் நடத்தி வருகிறது. மதுவினால் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட குற்றங்கள் நடைபெறுகின்றது. மாணவர்கள் மதுவை விலக்கி ஒழுக்கத்துடன் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். தமிழகத்துக்கு வந்த கேடுகளில் மதுவும் ஒன்று. இதனை முற்றிலும் ஒழிக்க மாணவர்கள் ஒன்று பட்டு செயல்பட வேண்டும். மக்கள் நலனில் அக்கறையின்றி அரசு மதுக்கடைகளை திறந்து வைக்கிறது என்றார்.

விழாவுக்கு மதிமுக மாவட்ட செயலாளர் கபினிசிதம்பரம் தலைமை வகித்தார். ஒன்றிய மதிமுக செயலாளர் கலையரசன் வரவேற்றார். விழாவில்,கரூர் மாவட்ட அவைத் தலைவர் ஆண்டிபட்டி ராமசாமி, அரசியல் ஆய்வி மைய உறுப்பினர் சீனிவாசப்பெருமாள், மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் அலங்கார் மனோகரன், நகரச் செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட மதிமுகவினர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்களை சந்தித்த வைகோ, மதுவை எதிர்த்து 2500 கிமீ நடைப் பயணம் மேற்கொண்டுள்ளேன். மக்கள் மாற்றத்தை விரும்புகின்றார். மக்கள் நலக் கூட்டணிக்கு மக்களின் பேராதரவு உள்ளது என்றார். அதிமுக அரசின் நாட்களை மக்கள் எண்ணிக் கொண்டிருப்பதாக குறிப்பிட்ட அவர், இதேபோல், தேர்தலில் ஜெயித்துவிடலாம் என திமுக பகல் கனவு காண்பதாகவும் வைகோ கூறினார். மேலும் இனி தமிழகத்தில் அமையவுள்ள ஆட்சி கூட்டணி ஆட்சியாகத்தான் இருக்கும் என்றும், மக்கள் நலக் கூட்டணி ஆட்சியமைக்கும் என்றும் வைகோ கூறினார்.












Click it and Unblock the Notifications