குவார்ட்டர் பாட்டிலில் 'தவக்களை'... 'குடிமகன்' டென்ஷன்.. 'பிரஸ் மீட்' வைத்துக் குமுறல்!
சென்னை: கடமையாக குடிக்கப் போன இடத்தில், குவார்ட்டர் பாட்டிலில் தவளை ஒன்று கிடந்ததால் குடிகார குடிமகன் ஒருவர் டென்ஷனாகி விட்டார். இதையடுத்து தனது வக்கீல் சகிதம் பிரஸ் மீட் வைத்து தனது மனக் குமுறலை இன்று கக்கினார்.
சம்பந்தப்பட்ட நபரின் பெயர் தென்னரசு. அழகிய தமிழ்ப் பெயர் கொண்ட தென்னரசு, சென்னை குமணன் சாவடி பஸ் ஸ்டாண்ட் பக்கமாக உள்ள டாஸ்மாக் கடைக்குப் போய் பிராந்தி வாங்கினார். குவார்ட்டர் பாட்டில் வாங்கினார். இந்த பிராந்தியானது, லேட்டஸ்டாக களம் இறக்கப்பட்டுள்ள பின்லாந்து நாட்டு சரக்காகும்.
உள்ளே ஒரு தவளை
படு ஆவலோடு குவார்ட்டர் பாட்டில் மூடியைத் திறந்து எட்டிப் பார்த்தபோது உள்ளே ஒரு தவளை செத்துக் கிடந்ததைப் பார்த்து வாந்தி வராத குறையாக டென்ஷாகி விட்டார். உடனே தனது வக்கீல் திருநாவுக்கரசுக்கு (இவருக்கும் அழகான தமிழ்ப் பெயர்தான்) போனைப் போட்டார். இருவருமாக கடகடவென சென்னை பிரஸ் கிளப்புக்கு வந்தனர். அ்ங்கு பிரஸ் மீட் வைத்தனர்.
குடிகாரர்கள் எண்ணிக்கை
அப்போது வழக்கறிஞர் திருநாவுக்கரசு, ரமணா விஜயகாந்த் ரேஞ்சுக்கு புள்ளிவிவரங்களுடன் பேசினார். அவர் கூறுகையில், தமிழக அரசு டாஸ்மாக் மதுபானக் கடையில், அரசுக்கு கிடைக்கும் ஆண்டு வருமானம் ரூபாய் 20 ஆயிரம் கோடி. தமிழ்நாட்டில் குடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே வருகிறது. தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கூட குடிக்கும் அவல நிலை உருவாகி உள்ளது.
சரக்கை தரமா தரனுமா இல்லையா...?
அரசுக்கு முக்கிய வருமானம் ஈட்டித் தரும் டாஸ்மாக் நிறுவனத்தை நடத்தும் தமிழக அரசு, மக்களுக்கு வழங்கும் மதுபானம் தரமானதாக இருக்க வேண்டும் என்பதில் அக்கறையும், கடமையும், பொறுப்பும் அந்த நிறுவனத்துக்கு உண்டு.
அக்கறையே இல்லையே...
ஆனால், இருதரப்பினரும் அக்கறை செலுத்தாததால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் மது தயாரிக்கப்படுகிறது.
மிடாஸ் கம்பெனியைத் தடை செய்யுங்கள்
இந்த நிலையை தடுக்க மிடாஸ் மதுபான கம்பெனி போன்ற மதுபான கம்பெனிகளை தடை செய்ய வேண்டும் எனவும், எனது கட்சிக்காரர் தென்னரசுக்கு தகுந்த நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம் என்றார்.