விஷால் மீது மேலும் மேலும் குவியும் "குடும்பத்தைப் பிரிச்சுட்டாரு" புகார்கள்
சென்னை: விஷாலுக்கு இப்போது புதுப் பெயர் கிடைத்துள்ளது. குடும்பத்தைப் பிரிப்பவர் என்பதுதான் அது. இது உண்மையோ இல்லையோ, நடிகர் சங்கத் தேர்தல் முடியும் வரை இந்தப் புகார்கள் குவிந்தபடிதான் இருக்கும் போல.
நடிகர் சங்கம் என்ற குடும்பத்தைப் பிரித்து விட்டார் என்று சிம்பு குற்றம் சாட்டுகிறார். சரத்குமாருடன் உள்ள பெர்சனல் பிரச்சினையால் நடிகர் சங்கத்தை பிரித்து விட்டார் என்றும் அவர் சொல்கிறார்.
அதேபோல ராதிகாவும் குற்றம் சாட்டுகிறார். இப்போது எஸ்.எஸ்.ஆர். குடும்பத்தினரும் இந்த குற்றச்சாட்டை வைத்துள்ளனர். எல்லா குற்றச்சாட்டுகளுக்கும் அடிப்படை நடிகர் சங்கத் தேர்தல்.
எத்தனையோ தேர்தல்களைக் கண்ட தமிழகத்தில்
எத்தனையோ தேர்தல்களைப் பார்த்து விட்டது இந்த தேசம்.. இந்த மாநிலம்.. ஆனால் இப்படி ஒரு கோக்குமாக்கான தேர்தலை இதுவரை கண்டதில்லை தமிழகம்.. அப்படி ஒரு விசித்திரமான வில்லங்க தேர்தலாக மாறி நிற்கிறது நடிகர் சங்கத் தேர்தல்.
என்னய்யா பிரச்சினை
என்னதான் பிரச்சினை என்றே தெரியவில்லை. ஆனால் ஆளாளுக்குப் பிடிவாதமாக ஒரு கருத்தை வைத்துக் கொண்டு அனல் பறக்க கத்திக் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
மூலப் புள்ளி் அவர்தான்...!
ஆனால் சரத்குமார் தரப்புக்கும், விஷால் தரப்புக்கும் இடையே இப்படி முட்டல் மோதல் ஏற்பட முக்கியப் புள்ளி, மூல காரணம்.. "அவர்"தான் என்பதை அனைவரும் ஒப்புக் கொள்கிறார்கள். அங்கிருந்து ஆரம்பித்ததுதான் துவேஷம் என்றும் சொல்கிறார்கள்.
ஆரம்பிச்சது அவர்தான்
உண்மையில் இப்போது யாருடைய கை ஓங்கியுள்ளதாக சொல்லப் படுகிறதோ அந்தத் தரப்பின் முக்கியப் புள்ளிதான் பிரச்சினையை ஆரம்பித்து வைத்ததாகவும் நடுநிலையாளர்கள் சொல்கிறார்கள். அவரது பிடிவாதம்தான் இப்படி விஸ்வரூபம் எடுத்து விட்டதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.
திட்டமிட்டுத் தெள்ளத் தெளிவாக
தனது குறிக்கோளை நிறைவேற்ற ஆரம்பத்திலிருந்தே திட்டமிட்டு பக்காவாக அவர் செயல்பட ஆரம்பித்து விட்டதாகவும், இதனால்தான் எதிர்த் தரப்பு திண்டாடிப் போய் நிற்பதாகவும் சொல்கிறார்கள்.
விஷால் மீது புதுப் புதுப் புகார்கள்
இந்த நிலையில் விஷால் அணி மீது புதுப் புதுப் புகார்களை எதிர்த் தரப்பு சுமத்தி வருகிறது. நடிகர் சங்கம் என்ற குடும்பத்தைப் பிரித்து விட்டார் என்பது ராதிகா சிம்பு ஆகியோரின் குற்றச்சாட்டு.
எஸ்.எஸ்.ஆர். குடும்பத்தையும் பிரிச்சுட்டாராமே
இந்த நிலையில் எஸ்.எஸ்.ஆர். குடும்பத்தையும் பிரித்து விட்டார் விஷால் என்று ஒரு புதுப் பஞ்சாயத்து கிளம்பியுள்ளது. எஸ்.எஸ்.ஆரின் மகன்கள் இரு பிரிவாக பிரிந்து ஆளுக்கு ஒரு குழுவில் இணைந்து நிற்கின்றனர். இந்த நிலையில்தான் எஸ்.எஸ்.ஆரின் நினைவு நாளை வைத்து புதுப் பிரச்சினை கிளம்பியுள்ளது.
ஆளுக்கு ஒரு பக்கம்
மறைந்த லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆரின் முதல் மனைவியின் மகன் ராஜேந்திர குமார். இவரது மகன் பங்கஜ்குமார். இவர் விஷால் அணியில் இணைந்து செயல்படுகிறார். 2வது மனைவி தாமரைச்செல்வியின் மகன் கண்ணன். இவர் சரத்குமார் அணியில் இருக்கிறார். தேர்தலை வைத்து விஷால், எஸ்.எஸ்.ஆரின் குடும்பத்தைப் பிரித்து விட்டதாக ராதிகா குற்றம் சாட்டியுள்ளார்.
கண்ணன் சுமத்தும் குற்றச்சாட்டு
இதுகுறித்து கண்ணன் கூறுகையில், அப்பாவுக்கு வரும் 24ம் தேதிதான் முதலாண்டு நினைவு. ஆனால், அந்த அணியினர் 12ம் தேதி நிகழ்ச்சி நடத்துவதாக அறிவித்துள்ளனர். இதற்கு தற்கு காரணம் என்ன? இந்த நிகழ்ச்சியை, எஸ்.எஸ்.ஆரின் குடும்ப நிகழ்ச்சி என்று சொல்ல வேண்டியதுதானே. பாண்டவர் அணி சார்பில் நடக்கும் நிகழ்ச்சி என்று சொல்வதற்கு காரணம் என்ன? வரும் 11ம் தேதி சரத்குமார் அணியின் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. அப்போது நான் பல உண்மைகளை கூறுவேன் என்றார் அவர் கோபமாக. இவர் பொருளாளர் பதவிக்குப் போட்டியிடுகிறார். எதிர்த்துப் போட்டியிடுவது நடிகர் கார்த்தி.
ராஜேந்திர குமார் கூறுவது என்ன
ராஜேந்திர குமார் கூறுகையில், வரும் 24ம் தேதி எஸ்.எஸ்.ஆரின் முதலாண்டு நினைவு நிகழ்ச்சியை, அவர் உயிலில் எழுதியுள்ளபடி, அவர் பிறந்த ஊரான சேடப்பட்டியில் நடத்த இருக்கிறோம். அன்றைய தினமே அங்கு அவருக்கு மணிமண்டபம் கட்டவும் அடிக்கல் நாட்டுகிறோம். எங்கள் தந்தைக்கு முழு உருவ சிலையும் நிறுவ உள்ளோம். சென்னையில் இருந்து முக்கிய பிரமுகர்கள் சேடப்பட்டிக்கு வந்து பங்கேற்க முடியாது என்ற காரணத்தினால், 12ம் தேதி மாலை, சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் எஸ்.எஸ்.ஆர் முதலாண்டு நினைவு நிகழ்ச்சி நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளோம்.
மனசாட்சி இல்லாமல்
எனது மகன் பங்கஜ்குமார், நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறார். விஷால் தலைமையில் இயங்கும் பாண்டவர் அணிக்கு ஆதரவாக இருக்கிறார். ஆனால், எனது அப்பா குறித்து நடிகை ராதிகா கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் பேசுகிறார். எஸ்.எஸ்.ஆர் குடும்பம் இரண்டாகப் பிரிந்து விட்டதாகச் சொல்கிறார். அதை விஷால் பிரித்து விட்டதாகவும் குற்றம் சாட்டுகிறார். இது தவறானது. எஸ்.எஸ். ஆர் நினைவு விழா நிகழ்ச்சி அனைவருக்கும் பொதுவான நிகழ்ச்சி என்றார் அவர்.
சீக்கிரம் தேர்தலை முடிச்சு ஸ்கிரீனை இழுத்து மூடிட்டுப் போங்கப்பா.. முடியலை!