நாமக்கல் தனியார் பள்ளியில் பிளஸ் 2 மாணவர் தற்கொலை
நாமக்கல்: நாமக்கல்லிலுள்ள பிரபல தனியார் பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். மாணவர்கள் பள்ளியையும், விடுதியையும் சூறையாடியதால் பதற்றம் ஏற்பட்டது. இதனால், பாதுகாப்புக் கருதி நகரில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள குட்டிமேய்க்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சீனிவாசனின் மகன் வெங்கடேசன் (17). நாமக்கல் காவெட்டிப்பட்டியிலுள்ள பிரபல தனியார் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 உயிரியல் பிரிவில் படித்து வந்தார்.
பள்ளி விடுதியிலேயே தங்கியிருந்த அவர், வழக்கம் போல சனிக்கிழமை காலை 6 முதல் 7.30 மணி வரை நடைபெற்ற பயிற்சி வகுப்பில் பங்கேற்க தனது அறையில் தங்கியிருந்த 6 மாணவர்களுடன் சென்றார். ஆனால், பாதியிலேயே கழிவறைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு, அவர் விடுதி அறைக்குச் சென்றார்.
நீண்ட நேரமாகியும் வகுப்புக்குத் திரும்பாததால், அறை மாணவர்கள் விடுதிக்குச் சென்று பார்த்தனர். அப்போது வெங்கடேசன் தனது அறையில் நைலான் கயிற்றால் தூக்கிட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தாராம். சக மாணவர்கள் உடனடியாகக் கதவை உடைத்துச் சென்று வெங்கடேசனை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்ல தூக்கி வந்ததாகத் தெரிகிறது. அதற்குள் அவர் உயிரிழந்து விட்டதால், உடலை விடுதி அறையிலேயே வைத்து விட்டனராம்.
இதுகுறித்து பள்ளி நிர்வாகிகள் அளித்த தகவலை அடுத்து, நாமக்கல் போலீஸார் பள்ளிக்குச் சென்று வெங்கடேசனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து, பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்களிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவன் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து சகமாணவர்கள் விடுதியை சூறையடினர். பின்னர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பள்ளி காலவரையின்றி மூடப்பட்டது.
ஒழுங்கு நடவடிக்கை
இதுகுறித்து காவல் ஆய்வாளர் செல்லமுத்து கூறியது: பள்ளியில் ஒழுங்கீனம் காரணமாக ஏற்கெனவே மாணவர் வெங்கடேசன் இருமுறை இடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில், ஆசிரியைக்கு ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துத் தெரிவிப்பதாகக் கூறி, அநாகரிகமாக நடந்து கொண்டாராம்.
இதை பள்ளித் தாளாளர் கண்டித்ததுடன், பள்ளியை விட்டு வெளியேற்றும் நடவடிக்கையையும் மேற்கொண்டதால், அவர் தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றார் அவர். தொடர்ந்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரண்டாவது தற்கொலை
இந்தப் பள்ளி விடுதியில் கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி இரவு பிளஸ் 1 மாணவர் மோகன்ராஜ் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக பள்ளியின் தாளாளர் தங்கவேல், விடுதிக் காப்பாளர் ரேணுசிங், சக மாணவர் ஒருவர் ஆகியோர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
போலீசார் குவிப்பு
இரண்டாவது சம்பவமாக தற்போது மாணவர் வெங்கடேசன் தற்கொலை செய்து கொண்டார். இதனால், அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க பள்ளியிலும், நகரின் முக்கிய இடங்களிலும் சேலம் மாநகர துணை ஆணையர் ஏ.ஜி.பாபு, கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications