தேமுதிக 'மாஜி'க்கு கொலை மிரட்டல்: எம்எல்ஏ பார்த்தசாரதியின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை: அதிருப்தி எம்எல்ஏவாக செயல்பட்டு பின்னர் பதவியை ராஜினாமா செய்த தமிழழகனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கேட்ட தேமுதிக எம்எல்ஏ பார்த்தசாரதியின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
திட்டக்குடி சட்டசபைத் தொகுதி தேமுதிக அதிருப்தி எம்எல்ஏ தமிழழகன். இவர் கடந்த மாதம் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இவருக்கு கடந்த 3ம் தேதி செல்போனுக்கு வந்த அழைப்பில், அரசியலை விட்டு ஒதுங்கவில்லை என்றால் கொலை செய்து விடுவோம் என்று மர்ம நபர் ஒருவர் மிரட்டியுள்ளார்.

இந்நிலையில் இவர் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக திட்டக்குடி போலீஸில் புகார் செய்தார். இது தொடர்பான புகார் மனுவில், "கடந்த மார்ச் 3ம் தேதி என்னுடைய மொபைல் போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசியவர், அரசியலை விட்டு ஒதுங்கிவிடு. இல்லையென்றால் கொலை செய்து விடுவோம் எனக்கூறி மிரட்டினார்'' என தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, தமிழழகனுக்கு கொலை மிரட்டல் விடுத்தது தேமுதிக எம்எல்ஏ பார்த்தசாரதி என்பது தெரியவந்தது. அதையடுத்து பார்த்தசாரதி மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் அளிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பார்த்தசாரதி மனுதாக்கல் செய்தார்.
இந்தமனு நீதிபதி ஆர்.மாலா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை வாபஸ் பெறுவதாக மனு தாரர் தரப்பு வழக்கறிஞர் கூறியதையடுத்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications