கொடுங்கையூர் பேக்கரி விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு
சென்னை கொடுங்கையூர் பேக்கரி தீ விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களில், மேலும் ஒருவர் சிகிச்சைப் பலனிக்காமல் உயிரிழந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை: சென்னை கொடுங்கையூர் பேக்கரி தீ விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களில், மேலும் ஒருவர் சிகிச்சைப் பலனிக்காமல் உயிரிழந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
சென்னை கொடுங்கையூர் மீனாம்பாள் பிரதான சாலையில் உள்ள பேக்கிரியில் கடந்த 15ம் தேதி நள்ளிரவு சமையல் எரிவாயு உருளையில் ஏற்பட்ட கசிவினால் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில், அங்கு தீயை அணைக்க சென்ற ஏகராஜ் என்ற தீயணைப்புப் படை வீரர் பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.
மேலும் 47 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனை ஆகியவற்றில் தீவிர சிகிச்சைப் பெறுகின்றனர். இந்த நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொடுங்கையூர் பரமானந்தம் என்பவர் புதன்கிழமை இரவு இறந்தார்.
இதற்கிடையே, சம்பவத்தின்போது தீ விபத்தை வேடிக்கை பார்க்க வந்து, தீயில் சிக்கி பலத்த காயமடைந்த கொடுங்கையூர் கண்ணதாசன்நகரைச் சேர்ந்த அபிமன்யு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை அதிகாலை இறந்தார். இதையடுத்து தீ விபத்தில் இறந்தோரின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது.
இந்நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து பேக்கரி உரிமையாளர் ஆனந்த் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதனையடுத்து பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.
சொந்த விருப்பத்தின் பேரில் தனியார் மருத்துவமனைக்குச் சென்ற இரண்டு பேர் மீண்டும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 16 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 13 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. ஒருவருக்கு வென்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மகிழ்வன் என்பவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதுவரை 5 பேர் பலியாகியுள்ளதால் கொடுங்கையூர் பகுதியில் பெரும் சோகம் நிலவுகிறது.