நெல்லையில் பலத்த காற்றுடன் மழை.. ஜெ.,வை வரவேற்க வைத்திருந்த அலங்கார வளைவு சரிந்தது
நெல்லை: நெல்லையில் பலத்த காற்றுடன் நேற்று மாலை மழை பெய்ததால் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை வரவேற்க வைத்திருந்த அலங்கார வளைவு சரிந்து விழுந்தது.
தமிழக சட்டசபைக்கு மே 16 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள 20 சட்டசபைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பாளையங்கோட்டையில் இன்று நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா கலந்துகொள்கிறார்.
இதையொட்டி ஜெயலலிதாவை வரவேற்பதற்காக நெல்லையில் மாவட்ட நீதிமன்றம் அருகே மிகப் பெரிய அளவில் முகப்பு வளைவு வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை நெல்லையில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் காற்றுடன் மழை பெய்தது. அப்போது பலத்த காற்று வீசியதால் ஜெயலலிதாவை வரவேற்க வைக்கப்பட்டிருந்த வளைவு சரிந்து விழுந்தது. சாலையில் சரிந்து விழுந்ததால், அதனை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது. இதனால் சுமார் ஒரு மணி நேரம் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications