அப்படியே ஜெ. மாதிரி.. ‘நீங்கள் யார் அதை கேட்க’.. ‘கோர்ட்டா’... செய்தியாளர்களிடம் சீறிய தீபா
தீபா பேரவை முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளதாக என்ற கேள்வியை கேட்ட உடன் ‘நீங்கள் யார் அதை கேட்க’ என்று செய்தியாளர்களிடம் தீபா சீறிப் பாய்ந்தார்.
சென்னை: தீபா பேரவை தொடர்பான கேள்விக்கு அதை எல்லாம் கேட்க நீங்கள் யார் என்று தீபா செய்தியாளர்களிடம் எதிர் கேள்வி எழுப்பினார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தீபா, தமிழகத்தை தமிழர் தான் ஆளவேண்டும் என்று சொல்வதில் தவறு ஒன்றும் இல்லை என்று கருத்து தெரிவித்தார். உள்ளாட்சித் தேர்தல் கண்டிப்பாக போட்டியிடுவேன் என்றும் ஏன் தேர்தல் நடத்த தாமதம் செய்கிறார்கள் என்பது பற்றி தெரியவில்லை என்றும் கோபப்பட்டார்.
இதனிடையே, செய்தியாளர்கள், தீபா பேரவை முறையாக இன்னும் பதிவு செய்யப்படவில்லையே என்று கேள்வி எழுப்பினார்கள். இந்தக் கேள்வியை சற்றும் எதிர்பாராத தீபா, டக்கென்று ஆவேசமாக, "அதை கேட்க நீங்கள் யார்? உங்களிடம் அதனை நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது. நீங்கள் ஒன்றும் கோர்ட் கிடையாது. அது உங்களுக்கு தேவை இல்லாதது. உங்கள் தனிப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது" என்று படபடவென பேசினார்.
இதனால் கோபமடைந்த பத்திரிகையாளர் பாதியிலேயே செய்தியாளர் சந்திப்பை முடித்துக் கொண்டு வெளியே வந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.