வேட்பு மனுவில் கணவரின் பெயரை குறிப்பிடவில்லையாமே தீபா...!!!
ஆர்கே.நகர் தொகுதியில் போட்டியிடும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தனது வேட்பு மனுவில் கணவரின் பெயரை குறிப்பிடவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: ஆர்கே.நகர் தொகுதியில் போட்டியிடும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தனது வேட்பு மனுவில் கணவரின் பெயரை குறிப்பிடவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. நேற்று தீபா வேட்புமனுத்தாக்கல் செய்த போதும் அவரது கணவர் உடன் வரவில்லை.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவரது சாயலில் இருக்கும் அவரது அண்ணன் மகளான தீபாவுக்கு அதிமுக தொண்டர்கள் ஆதரவு தெரிவித்தனர். ஆர்கே.நகர் தொகுதி அதிமுக மகளிர் அணியினரும் ஆர்கே.நகர் தேர்தலில் தீபா போட்டியிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
சேலம், திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் தீபாவின் பெயரில் பேரவைகளும் தொடங்கப்பட்டன. ஓ.பன்னீர்செல்வம் சசிகலா மோதலுக்குப் பின் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் தீபாவும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சந்தித்தனர்.
பேரவையை தொடங்கிய தீபா
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தீபா ஓபிஎஸ் உடன் இணைந்து அதிமுகவை மீட்க இருகரங்களாக செயல்படுவோம் என்றார். இதையடுத்து கடந்த மாதம் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற பெயரில் தீபா, பேரவையை தொடங்கினார்.
ஓபிஎஸ் தரப்பு அதிருப்தி
இதைத்தொடர்ந்து ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தார். தீபாவின் இந்த முடிவால் ஓபிஎஸ் தரப்பினர் அதிருப்திக்கு ஆளாயினர்.
விலகிய தீபாவின் கணவர்
கடந்த வாரம் தீபாவின் பேரவையில் இருந்து விலகுவதாக அவரது கணவர் மாதவன் அறிவித்தார். மேலும் தீபாவை சசிகலாதான் இயக்குகிறார் என்றும் பரபரப்பு குற்றம்சாட்டினார்.
நேற்று வேட்புமனுத்தாக்கல்
தீபாவின் குடும்பத்தில் கலகம் ஏற்பட்டதையடுத்து அவரது பேரவையைச் சேர்ந்த பலர் அங்கிருந்து விலகி ஓபிஎஸ் அணியில் ஐக்கியமாயினர். இந்நிலையில் தீபா ஆர்கே.நகர் தொகுதியில் நேற்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
கணவரின் பெயரை குறிப்பிடவில்லை
வேட்பு மனுவில் தீபா தனது கணவரின் பெயரை குறிப்பிடவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. தீபாவின் ஒவ்வொரு பிரஸ் மீட்டுக்கும ஆரம்பம் முதலே உடன் இருந்த மாதவன் நேற்றைய வேட்பு மனுத்தாக்கலுக்கு கூட தீபாவுடன் வரவில்லை. மேலும் தீபாவின் வேட்புமனுவில் அவரது சொத்து மதிப்பு குறித்த விவரமும் குறிப்பிடவில்லை.
உச்சக்கட்ட மோதல்
ஆர்.கே.நகர் தேர்தலில் தீபா போட்டியிடுவதில் மாதவனுக்கு உடன்பாடில்லை என கூறப்படுகிறது. இதனால் தீபாவின் குடும்பத்தில் வெடித்துள்ள மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.