ஜெ. நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்… ஆர்.கே. நகரில் வேட்புமனுவை தாக்கல் செய்தார் தீபா
ஜெயலலிதா நினைவிடத்தில் அவரது அண்ணன் மகள் தீபா மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின்னர், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுவை எம்ஜிஆர் அம்மா பேரவை சார்பில் தீபா தாக்கல் செய்தார்.
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இன்று தேர்தல் அதிகாரி பிரவீன் நாயரிடம் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா தாக்கல் செய்தார்.
ஆர்.கே. நகரில் எம்எல்ஏவாகவும் தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா உடல் நலமின்றி மரணம் அடைந்தார். இதனையடுத்து இந்த இடம் காலியானதாக அறிவிக்கப்பட்டது.
மேலும் வரும் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். எனவே, வேட்புமனு தாக்கல் விறுப்பாக இன்று நடைபெற்று வருகிறது.

தீபாவின் ஆசை
ஜெயலலிதா மரணம் அடைந்த உடன், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன் என்று அவரது அண்ணன் மகள் தீபா அறிவித்தார். மேலும், தொடர்ந்து அரசியலில் ஈடுபடுவேன் என்றும் கூறினார். அதற்காக கட்சியும் தொடங்கப் போவதாக கூறி வந்தார்.

எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை
தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏற்ற வகையில் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை தீபா ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதி தொடங்கினார். அதன் பொருளாளராகவும் தன்னை அறிவித்துக் கொண்டார்.

வேட்புமனு தாக்கல்
இந்நிலையில், இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று தீபா, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் வேட்புமனுவை தாக்கல் செய்ய தேர்தல் அலுவலகம் சென்றார். தேர்தல் அதிகாரி பிரவீன் நாயரிடம் தனது வேட்பு மனுவை அவர் தாக்கல் செய்தார்.

ஜெ.விற்கு மரியாதை
முன்னதாக, சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு இன்று காலை தீபா சென்றார். அங்கு அவரது அத்தையும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவிற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அங்கிருந்து புறப்பட்டு நேராக ஆர்.கே. நகர் சென்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.












Click it and Unblock the Notifications