பொருளாளராக இருந்த தீபா செயலாளர் ஆனதன் பரபர பின்னணி
எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் பொருளாளராக இருந்த தீபா தானே செயலாளராகவும் இருக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
சென்னை: எம்ஜிஆர், அம்மா, தீபா பேரவையின் செயலாளராக நியமிக்கப்பட்ட ராஜாவுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் ஜெ.தீபாவே அந்த பொறுப்பை வகிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 24ஆம் தேதி ஜெ.தீபா, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை தொடங்கினார். தான் பொருளாளர் என்று அறிவித்தார். தொடர்ந்து சில நிர்வாகிகளையும் அவர் நியமித்தார்.

இந்நிலையில் பேரவையின் செயலாளர் ராஜா பலருக்கு பதவி வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் சென்னை தியாகராய நகரில் உள்ள வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ராஜாவுக்கு எதிராக முழக்கமிட்ட அவர்கள் ராஜாவை பேரவை செயலாளராக ஏற்க முடியாது என்றனர். அவர் ஒன்றும் யோக்கியமானவர் இல்லை என்றும் அவர்கள் கூறினர்.
காலை 11 மணியிலிருந்து போராட்டம் நடந்ததையடுத்து தீபா இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். நானே பேரவையின் செயலாளராக செயல்படுவேன் என்று கூறினார்.
விரைவில் புதியவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் தீபா தெரிவித்தார்.. நாளை மாலை அறிவிக்கப்படும் என்றார். செய்தியாளர்கள் சந்திப்பின்போதே பலர் உள்ளே புகுந்து கோஷமிட்டனர். ராஜா பணம் வாங்கிக் கொண்டு பலரை ஏமாற்றியதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
நிர்வாகிகள் குறித்து ஆரம்பத்திலேயே பெரிய அளவில் எதிர்ப்பு உருவானதால்தான் எடுத்த எடுப்பிலேயே சிக்கல் வரக் கூடாது என்ற எண்ணத்தில்தான் ராஜாவை தீபா நீக்கி விட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் தீபாவின் அறிவிப்பு வெளியான பிறகும் கூட பலர் தீபா வீட்டின் முன்பு ராஜாவுக்கு எதிராக கோஷமிட்டபடி காணப்பட்டனர்.












Click it and Unblock the Notifications