டிராமா போடுறாங்க.. சசியும் ஓபிஎஸும் ஊழல் மட்டைகள்.. 3 நாட்களுக்குப் பிறகு வாய் திறந்த தீபா!
ஓபிஎஸ் நாடகம் நடத்துகிறார் என ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளருமான தீபா குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: ஏற்கனவே கதை எழுதி தயாரிக்கப்பட்ட நாடகத்தை திறம்பட நடத்துகிறார் ஓபிஎஸ் என ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா குற்றம்சாட்டியுள்ளார். சசிகலாவும் ஓபிஎஸும் ஊழல் குட்டையில் ஊறிய மட்டைகள் என்றும் அவர் சாடியுள்ளார்.
தமிழக அரசியல் களத்தில் கடந்த 3 நாட்களாக அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. சசிகலாவுவின் குடும்பத்தை வெறுத்த அதிமுக அடிமட்ட தொண்டர்கள் சாயலில் ஜெயலலிதா போன்று இருக்கும் அவரது அண்ணன் மகளான தீபாவை அரசியலுக்கு வருமாறு வற்புறுத்தினர்.
இதைத்தொடர்ந்து சசிகலாவுக்கும் ஓபிஎஸ்க்கும் இடையே ஏற்பட்ட அதிகார போட்டியால் அதிமுக இரண்டாக உடைந்தது. இதையடுத்து சசிகலா குடும்பத்தின் பிடியில் இருந்து அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என சபதம் ஏற்ற ஓபிஎஸ் அணியும் தீபாவும் கைகோர்த்தனர்.

ஓபிஎஸ்க்கு எதிராக மாறிய தீபா
கட்சியை காப்பாற்ற இணைந்து செயல்படுவோம் என கூறிய தீபா, தனி அமைப்பை தொடங்கினார். நடைபெற இருந்த ஆர்கே நகர் இடைத்தேர்தலிலும் தனித்தே போட்டியிடப் போவதாக அறிவித்த தீபா ஓபிஎஸ் அணியினரும் சசிகலாவுடன் இருந்தவர்கள்தான் எனக்கூறி அவர்களுக்கு எதிராக மாறினார்.

ஓபிஎஸ் அணிக்கு மாறிய நிர்வாகிகள்
ஓபிஎஸ் அணியினர் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வந்தார் தீபா. அவரது குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக அவரது பேரவையைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் ஓபிஎஸ் அணிக்கு தாவினர்.

நாடகமாடுகிறார் ஓபிஎஸ்
இதனால் உச்சக்கட்ட கோபத்தில் உள்ள தீபா ஓபிஎஸ் அணியையும் சசிகலா குடும்பத்தினரையும் மாறிமாறி விளாசி வருகிறார். இந்நிலையில் ஏற்கனவே கதை எழுதி தயாரிக்கப்பட்ட நாடகத்தை திறம்பட நடத்துகிறார் ஓபிஎஸ் என தீபா குற்றம்சாட்டியுள்ளார்.

ஊழல் குட்டையில் ஊறிய மட்டைகள்
மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் துரோக கூட்டத்தை அடையாளம் கண்டுள்ளனர் என்றும் தீபா சாடியுள்ளார். சசிகலாவும் ஓபிஎஸும் ஊழல் குட்டையில் ஊறிய மட்டைகள் என்றும் தீபா விளாசியுள்ளார்.

இவர்கள்தான் காரணம்
இரட்டை இலையையும் கட்சியையும் முடக்க இவர்கள்தான் காரணம் என்றும் தீபா கூறியுள்ளார். கடந்த 3 நாட்களாக தமிழக அரசியலே அல்லோகளப்பட்டு வந்த நிலையில் தீபா வாய் திறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications