எடப்பாடியும், தினகரனும் அதிமுக தொண்டர்களை ஏமாற்றி வருகின்றனர்... தீபா அட்டாக்
எடப்பாடி பழனிச்சாமியும், தினகரனும் அதிமுக தொண்டர்களை ஏமாற்றி வருகின்றனர் என்று தீபா தெரிவித்தார்.
அரியலூர்: எடப்பாடி பழனிச்சாமியும், தினகரனும் அதிமுக தொண்டர்களை ஏமாற்றிவிட்டு கட்சியை அழிக்க நினைக்கின்றனர் என்று தீபா விமர்சித்துள்ளார்.
அரியலூரில் மாணவி அனிதாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக முதல்முறையாக சென்னையை விட்டு வெளியே வந்தார் தீபா. அங்கு குழுமூர் சென்ற அவர் அனிதாவின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியில், அதிமுக தொண்டராக இருந்தால் தினகரன் ஏன் ஆட்சியை கலைக்க கூறுகிறார். எடப்பாடி தலைமையிலான அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்பது ஒரு புறம் இருந்தாலும் பெரும்பான்மை இல்லாத அரசாக உள்ளது.
விரட்டியடிக்கப்பட்டவர்
இவ்வளவு குழப்பங்களையும் ஏற்படுத்திவிட்டு தனித்தனியாக கூட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஜெயலலிதாவால் விரட்டி அடிக்கப்பட்ட தினகரன் கூட்டினால் கூட்டம் வரும் என்று நினைக்கிறீர்களா.
அழிப்பதே நோக்கம்
அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்துவது டிடிவி தினகரன் போன்ற கைக்கூலிகள்தான். அவர் திமுகவுக்கு பணியாற்றி வருகிறார். அதிமுகவை அழிப்பதே அவரது நோக்கமாக உள்ளது.
தொண்டர்களை ஏமாற்றி...
இந்த பக்கம் பார்த்தால் பாஜக அரசுக்கு கைக்கூலியாக இருந்து எடப்பாடி தரப்பினர் அழித்து கொண்டிருக்கின்றனர். மறுபக்கம் தினகரன் அழித்து கொண்டிருக்கிறார். மொத்தத்தில் அதிமுக தொண்டர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். தமிழக மக்களுக்கு துரோகம் செய்து வருவதை பார்க்கும் போது இந்த ஆட்சி கலைக்கப்பட்டு ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டும்.
நீட் தேர்வு ரத்து செய்ய...
நன்றாக இருந்த ஜெயலலிதா ஏன் திடீரென மரணம் அடைந்தார் என்பதை கண்டறிய நீதி விசாரணை நடத்த வேண்டும். ஜெயலலிதாவுக்கு துரோகம் விளைவித்த குடும்பத்தை சும்மா விட கூடாது. மாணவி அனிதாவின் உயிரிழப்புக்கு மரியாதை செலுத்தும் விதமாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
அக்கறையில்லை
எந்த அணியில் இருப்பது என்பதிலேயே குறியாக உள்ளனர். மக்கள் நலனில் அக்கறையில்லை என்றார் அவர்.