சசிகலா கேம்ப் அடித்திருக்கும் கூவத்தூருக்கு ஜெ. அண்ணன் மகன் தீபக் வருகை!
கூவத்தூரில் ரிசார்ட்டில் தங்கி உள்ள சசிகலாவை சந்திக்க ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் வந்துள்ளதாக தகவல் வெளியுள்ளது.
சென்னை: எம்எல்ஏக்களை சமாதானப்படுத்த கூவத்தூர் சென்றுள்ள சசிகலா நேற்றிரவு கோல்டன் பே ரிசார்ட்டில் தங்கினார். சசிகலாவை சந்திக்க ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் வந்துள்ளதாக அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றத்தில் அறிவிக்கப்படுகிறது. இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் உஷார் நிலையில் உள்ளது. சென்னையில் மட்டும் 20000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் முக்கிய தலைவர்களின் வீடுகளுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சசிகலாவின் அரசியல் வாழ்க்கையை நிர்ணயிக்கப் போகும் தீர்ப்பு என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று அதிமுக எ.எல்.ஏக்களை சந்திக்க கூவத்தூர் விடுதிக்கு சென்ற சசிகலா, இரவு அங்கேயே தங்கிவிட்டார். அங்கு நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கிழக்குக் கடற்கரை சாலை முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மறைந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், சசிகலாவை சந்திக்க கூவத்தூர் ரிசார்ட்டுக்கு இன்று வந்துள்ளார்.
அதேபோல் அதிமுக அவைத் தலைவர் செங்கோட்டையன், ராஜ்யசபா எம்.பி நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோரும் ரிசார்ட்டுக்கு வந்துள்ளனர். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ராஜ்யசபா எம்.பி வைத்திலிங்கம் ஆகியோரும் ரிசார்ட்டில் சசிகலா உடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஒருவேளை தீர்ப்பு தனக்கு எதிராக இருக்கும்பட்சத்தில், கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து சசிகலா இரவு நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் தீபக் கூவத்தூர் சென்றுள்ளது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, சசிகலாவிற்கு எதிரான மனநிலையில் இருக்கிறார். அத்தை பார்க்க விடவில்லை என்ற கோபம் தீபாவை விட்டு மறையவில்லை. ஆனால் சசிகலாவிற்கு ஆதரவாகவே தீபாவின் அண்ணன் தீபக் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications