பொதுக்கூட்டங்களில் அவதூறாகப் பேசியதாக வைகோ, பிரேமலதா மீது வழக்குப் பதிவு
திருப்பூர்: தேர்தல் பொதுக்கூட்டத்தில் அவதூறாகப் பேசியதாக அதிமுகவினர் அளித்த புகாரின்பேரில் தேமுதிக மகளிரணித் தலைவி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் மீது திருப்பூர் போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் கூறிகையில், திருப்பூர், யூனியன் மில் சாலையில் தேமுதிக சார்பில் தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி தேர்தல் அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் கடந்த 1-ஆம் தேதி நடைபெற்றது. இதில், தேமுதிக மகளிரணித் தலைவி பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் அறிக்கை குறித்து விளக்கிப் பேசினார்.

மேலும், இக்கூட்டத்தில் திருப்பூர் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினர் தங்கவேல், தேமுதிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், அந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் குறித்து அவதூறாகவும், மக்களிடம் விரோதத்தை வளர்க்கும் வகையிலும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தூண்டுதலின்பேரில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாகக் கூறி, திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் வடக்குக் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், பிரேமலதா விஜயகாந்த் மற்றும் வைகோ ஆகிய இருவர் மீதும் இரு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications