காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தமிழக அரசு அவதூறு வழக்குகளை தொடர்கிறது- விஜயதாரணி குற்றச்சாட்டு
நகார்கோயில்: எதிர்க்கட்சி உறுப்பினர்களை ஒடுக்கும் நோக்கத்தில், தமிழக அரசு அவதூறு வழக்குகளை தொடர்வதாக காங்கிரஸ் கட்சியின் சட்டசபை உறுப்பினர் விஜயதாரணி குற்றம் சாட்டியுள்ளார்.
கருங்கலில் 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 27-ந் தேதி நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் விஜயதாரணி கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி, முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக, அரசு வழக்கறிஞர் ஞானசேகர், நாகர்கோயில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணை தொடர்பாக நீதிமன்றத்தில் விஜயதாரணி ஆஜராகாததால் நாகர்கோவில் அமர்வு நீதிமன்றம் கடந்த ஜுன் 15-ந் தேதிஅவருக்கு பிடி ஆணை பிறப்பித்திருந்தது. இதையடுத்து, இன்று விஜயதாரணி நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜரானார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை ஆகஸ்ட் 16-ந் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் விஜயதாரணி கூறியதாவது: எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான காழ்புணர்ச்சி காரணமாக தமிழக அரசு அவதூறு வழக்குகளை தொடர்கிறது என்று கூறினார்.