நான் சொன்னதை விஜயகாந்த் கேட்கவில்லை: பண்ருட்டி ராமச்சந்திரன்
சென்னை: தேமுதிக டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டாம் என விஜயகாந்திடம் கூறினேன். ஆனால் அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்று தே.மு.தி.க.விலிருந்து எம்.எல்.ஏ. பதவி உட்பட அனைத்து பதவிகளிலிருந்தும் ராஜினாமா செய்துள்ள பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தனக்கு வயதாகி விட்டதாலும், உடம்பு சரியில்லை என்பதாலும் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக பண்ருட்டி செவ்வாய்கிழமையன்று பண்ருட்டி ராமச்சந்திரன் திடீரென அறிவித்தார்.
அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த அறிவிப்பு பற்றி பலரும் பலவித கருத்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்குப் விதமாக செய்தியாளர்களை சந்தித்து அவர் பேட்டியளித்தார்.
தமது ராஜினாமா முடிவு திடீரென எடுத்ததல்ல என்றும், முன்கூட்டியே திட்டமிட்டதுதான் என்றும் தெரிவித்தார். தே.மு.தி.க. மீதான மக்களின் நம்பிக்கை குறைந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

ஓய்வு அவசியம்
உடல் நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து சமீபத்தில் மருத்துவ பரிசோதனை செய்துகொண்டதாகவும், அப்போது மருத்துவர்கள் தம்மை முழு ஓய்வு எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தியதாகவும், அதனைத் தொடர்ந்தே தாம் ராஜினாமா முடிவை எடுத்ததாகவும் பண்ருட்டி ராமச்சந்திரன். தெரிவித்தார்.

விஜயகாந்திற்கு தெரியும்
தேமுதிகவில் இருந்து நான் விலகியதால் கட்சிக்கு பின்னடைவு ஏதுமில்லை. விஜயகாந்தே கட்சியை வழிநடத்துவார். கட்சியை எப்படி நடத்துவது என்பது உள்ளிட்ட எல்லா விஷயங்களும் விஜயகாந்திற்கு தெரியும் என்றும் அவர் கூறினார். கட்சி என்னுடையது; நான்தான் அதனை நடத்துகிறேன் என விஜயகாந்த் ஏற்கனவே கூறியிருக்கிறார் என்பதையும் பண்ருட்டியார் சுட்டிக்காட்டினார்.

கருத்து வேறுபாடில்லை
அரசியலில் இருந்து விலகுவதற்கு முற்றிலும் உடல் நலக்குறைவே காரணம் என்று மீண்டும் வலியுறுத்திய அவர், விஜயகாந்துடன் தமக்கு கருத்துவேறுபாடு எதுவுமில்லை என்றும், விஜயகாந்தை தாம் நினைத்த நேரத்தில் சந்திக்க முடிந்தது என்றும், அதற்கு தடை ஏதும் இருந்ததில்லை என்றும் தெரிவித்தார்.

ரிட்டையர்மென்ட் வேண்டும்
எல்லா தொழில்களிலும் ஓய்வு இருக்கிறது. ஆனால் அரசியலில் மட்டும்தான் சாகும்வரை இருக்க நினைக்கிறார்கள். நான் எந்த பொறுப்பில் இருந்தாலும் முழு சக்தியையும் செலவிட்டு பணியாற்ற வேண்டும் என்ற கொள்கையுடையவன், ஆனால் தற்போதைய உடல் நிலையில் அது முடியாது என்பதால், பதவியில் தொடருவதில் பயனில்லை என்பதாலேயே நான் இந்த முடிவுக்கு வந்தேன்.

சொன்னதை கேட்கவில்லை
டெல்லி சட்டசபை தேர்தலில் ஓட்டுக்கள் கிடைக்காது என்று முன்னரே தெரிவித்தேன். தேமுதிக டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டாம் என விஜயகாந்திடம் கூறினேன். ஆனால் அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், ஏற்காடு இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று தாம் கூறியதை மட்டும் விஜயகாந்த் ஏற்றுக்கொண்டார்.

கருணாநிதியின் சுறுசுறுப்பு
தி.மு.க. தலைவர் கருணாநிதி இந்த வயதிலும் சுறுசுறுப்பாக பணியாற்றுகிறார் என்பது வியப்பான விசயம்தான்.

கட்சிக்குப் பின்னடைவில்லை
தே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 7 பேர்கள் விலகி இருக்கிறார்களே? அதனால் கட்சிக்கு பின்னடைவா? என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், அப்படியெல்லாம் பின்னடைவு ஏதுமில்லை. 7 பேரும் கட்சியிலிருந்து விலகவில்லை என்றும், அதிருப்தியாளர்கள்தான் என்றும் தெரிவித்தார்.

மக்களுக்கு திருப்தி
உயரிய லட்சியங்கள், கொள்கைகளுடன் ஆரம்பிக்கப்பட்ட தே.மு.தி.க.வின் இப்போதைய செயல்பாடு உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா? என செய்தியாளர்கள், கேட்டதற்கு, எனக்கு திருப்தி அளிப்பதை விட மக்களுக்கு திருப்தி அளிப்பதுதான் முக்கியம் என்று பதிலளித்தார்.

எதிர்காலத்தில் பார்க்கலாம்
சட்டசபையில் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடுகள் குறித்த உங்களது கருத்து என்ன? என்று கேட்டபோது, முதல்தடவை என்பதால் தொய்வு காணப்பட்டாலும், தங்களது அனுபவத்தில் திறமையை வளர்த்துக்கொண்டு எதிர்காலத்தில் சிறப்பாக செயல்படுவார்கள் என்று கூறினார்.

திறமையான எம்.எல்.ஏ
உடல் நலக்குறைவு காரணமாக, தாம் போட்டியிட்ட ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி மக்களுக்கு முழு மூச்சில் பணியாற்ற முடியாது என்பதால், அவர்கள் அடுத்து நடைபெறும் இடைத்தேர்தலில் வேறொரு திறமையானவரை தேர்ந்தெடுத்துக்கொள்ளட்டும் என்றும் பண்ருட்டியார் தெரிவித்தார்.

குடும்ப கட்சியாகிவிட்டதே?
ராஜினாமா முடிவை மறுபரிசீலனை செய்வீர்களா? எனக் கேட்டபோது, இல்லை என்று பதிலளித்தார். அதே சமயம்,மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், இந்தியாவில் இன்று எல்லா கட்சிகளுமே குடும்பக் கட்சிகள் ஆகிவிட்டன என்று கூறினார்.

மீண்டும் சந்திப்போம்
எனக்கு எல்லாமே மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்.தான் என்றும், அவர் இல்லை என்றால் தான் இல்லை என்றும் கூறினார்.
உடல் நலம் தேறிய பின்னர் மீண்டும் அரசியலுக்கு திரும்புவீர்களா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு " மீண்டும் சந்திப்போம்!" என சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications