டெல்லியில் விசராணையா? தினகரனிடம் சம்மனை வழங்கியது போலீஸ்
இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பான புகாரில் டிடிவி தினகரனிடம் டெல்லி போலீசார் சம்மனனை அளித்தனர்.
சென்னை: டிடிவி தினகரன் வரும் சனிக்கிழமை டெல்லியில் ஆஜராக டெல்லி போலீசார் சம்மன் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரட்டை இலை சின்னத்தைப் பெற டிடிவி.தினகரன் பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவருக்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்தது கடந்த 17ஆம் தேதி தெரியவந்தது. தெற்கு டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திராவிடம் இருந்து ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
இதுதொடர்பாக சுகேஷ் சந்திரசேகரிடம் நடத்திய விசாணையில் டிடிவி தினகரனிடம் இருந்து பணம் பெற்றதை ஒப்புக்கொண்டார். இரட்டை இலைச்சின்னத்தை பெற சுகேஷ் சந்திராவிடம், டிடிவி தினகரன் 60 கோடி ரூபாய் வரை பேரம் பேசியதும் தெரியவந்தது.
தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம்
இதையடுத்து டிடிவி.தினகரன் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பினர். தேர்தல் ஆணையத்துக்கே டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அதிர்ச்சி தெரிவித்தனர்.
டெல்லி போலீஸ் சென்னை வருகை
இந்நிலையில் இதுதொடர்பாக விசாரணை நடத்த டெல்லி குற்றப்பிரிவு உதவி கமிஷ்னர் சஞ்சய் ஷெராவத், ஆய்வாளர் நரேந்திரஷா தலைமையிலான டெல்லி காவல்துறையினர் சென்னை வந்தனர். தினகரன் வீட்டிற்கு சென்ற அவர்கள், லஞ்சம் பெற்றதாக சுகேஷ் தந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி தினகரனிடம் சம்மனை அளித்தனர்.
கைதான சுகேஷ் வரவில்லை
சென்னையிலேயே முகாமிடும் போலீசார் டிடிவி தினகரனிடம் தீவிர விசாரணை நடத்த உள்ளனர். சென்னை வந்துள்ள போலீசார் கைதான சுகேஷ் சந்திரசேகரை அழைத்துவரவில்லை. அவர் அளித்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உச்சக்கட்ட டென்ஷனில் டிடிவி...
டெல்லி நீதிமன்றம் சுகேஷ் சந்திர சேகரை விசாரிக்க 8 நாட்கள் அனுமதி வழங்கியுள்ளது. ஏற்கனவே கட்சியில் வெடித்துள்ள பிரச்சனையால் திணறியுள்ள தினகரன் , டெல்லி போலீசாரின் வருகையால் உச்சக்கட்ட டென்ஷனில் இருந்ததாக தெரிகிறது.