ரூபாய் நோட்டு செல்லாது விவகாரம்.. எதிர்க்கட்சிகள் தொடர் அமளி.. 17வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்
ரூபாய் நோட்டு விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் 17வது நாளாக இன்றும் முடங்கியது.
டெல்லி : ரூபாய் நோட்டு பிரச்சனையை எழுப்பி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் இன்றும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் 17வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது.
பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8ஆம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். இதையடுத்து நாட்டில் பெரும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. மோடியின் இந்த திடீர் அறிவிப்பால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். பாஜகவின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.
இதனிடையே நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 16ஆம் தேதி தொடங்கியது. தொடங்கிய நாள்முதல் ரூபாய் நோட்டு அறிவிப்பை திரும்பப் பெறக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. கூட்டத்தொடர் தொடங்கி ஒரு மாதம் ஆகவுள்ள நிலையில் ரூபாய் நோட்டு குறித்து விவாதம் நடத்தப்படாமலேயே பாஜக காலம் தாழ்த்தி வருகிறது.
ரூபாய் நோட்டு விவகாரத்தில் வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும், விவாதத்தின் போது பிரதமர் மோடி அவையில் இருக்க வேண்டும் என்றும் கோரி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
இன்றும் லோக் சபா மற்றும் ராஜ்ய சபாவில் இதே பிரச்சனையை எழுப்பி எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையின் நடுவே வந்து கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து, லோக் சபாவில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் சபாநாயகர் சுமித்ரா மகஜன் அடுத்த 14ம் தேதிக்கு அவையை ஒத்தி வைத்தார்.
பிற்பகலில் கூடிய ராஜ்ய சபாவில் 21 எம்பிக்கள் மட்டுமே பங்கேற்றனர். கூட்டத்தை நடத்த குறைந்தது 25 எம்பிக்கள் இருக்க வேண்டும் என்ற நிலையில் குறைவான எண்ணிக்கையில் எம்பிக்கள் இருந்ததால் கூட்டத்தை நடத்த காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. இதனையடுத்து, டிசம்பர் 14ம் தேதிக்கு ஒத்தி ராஜ்ய சபா ஒத்தி வைக்கப்பட்டது.