டெங்கு பீதி- நெல்லை அருகே ஊரையே காலி செய்யும் கிராம மக்கள்
நெல்லை: நெல்லை அருகே டெங்கு காய்ச்சலால் பீதியில் ஊரையே காலி செய்து வருகின்றனர் கிராம மக்கள்.
நெல்லை: நெல்லை மாவட்டம் களக்காடு அருகேயுள்ள தெற்கு புளியங்குளத்தில் சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் அச்சத்தில் மக்கள் ஊரையே காலி செய்து வருகின்றனர்.
அடிப்படை வசதிகள் அறவே இல்லாத புளியங்குளத்தில் குடிநீர் பிரச்சனைக்கும் குறைவு இல்லை. ஆழ் குழாய் கிணறுகளிலும், கூட்டு குடிநீர் குழாய்களிலும் தண்ணீர் வராததால் அங்குள்ள குடும்பத்தினர் பரிதவித்து வந்தனர். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளது. அப்போது டாக்டர்கள் இது வைரஸ் காய்ச்சல் என்று கூறி சிகிச்சை அளித்திருக்கின்றனர்.

இப்போதும் டெங்குவிற்கு சிகிச்சை அளிக்காமல் மர்ம காய்ச்சல் என்று சிகிச்சை அளிக்கின்றனர் என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டு. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், இரு நாட்களாக தலை வலி இருந்தது. பின்பு உடல் வலியோடு காய்ச்சலும் சேர்ந்தது.
நாங்குநேரி மருத்துவமனைக்கு சென்று ரத்த பரிசோதனை செய்ததில் டெங்கு காய்ச்சல் என்றனர். தினமும் போய் சிகிச்சை பெற்று வந்தோம். இப்போது முடியாமல் படுக்கையில் சேர்ந்துள்ளோம். இப்போது தான் பாதி பேர் நலம் பெற்று திரும்பி வருகின்றனர்.
மர்ம காய்ச்சல் பயம் வந்ததும் இங்கிருக்கும் பள்ளிக்கு பக்கத்து ஊரிலிருந்து வரும் குழந்தைகளை அனுப்பாமல் அதன் பெற்றோர் நிறுத்தி விட்டனர். 65 மாணவர்களை கொண்ட பள்ளி தற்போது 5 குழந்தைகளோடு இருக்கிறது. காய்ச்சல் காரணமாக கிராம மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இடம் பெயர்ந்து விட்டனர். இவர்கள் எப்போது திரும்புவார்கள் என்று தெரியவில்லை என்று கிராமத்தில் மிச்சம் இருப்பவர்கள் சோகத்துடன் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications