இந்தக் கொடுமை யாருக்கும் வரக்கூடாது.. அடுத்தடுத்து 3 பேர்.. பைக்கில் வைத்து எடுத்துச் சென்ற அவலம்!
நெல்லூர்: ஆந்திரா பிரதேச மாநிலத்தில், உயிரிழந்த தன் மகனின் சடலத்தை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மறுத்ததால் இருசக்கர வாகனத்தில் தூக்கிச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல, தனியார் ஆம்புலன்ஸில் அதிக கட்டணம் கேட்டதால் மகளின் உடலை பைக்கிலேயே வைத்து சிறுமியின் அப்பா சொந்த ஊருக்கு கொண்டு சென்றுள்ளார்.
ஆந்திராவில் கடந்த 1 வாரத்திற்குள் இதுபோல மூன்று சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதால் அம்மாநில அரசை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
வங்கக் கடலில் உருவாகும் புயல்... ஆந்திரா ஒடிசாவில் மையம் கொள்ளும்...தமிழகத்தில் வெயில் சுடும்
கால்வாயில் மூழ்கி பலி
ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே, நேற்று முன்தினம் ஸ்ரீராம், ஈஸ்வர் ஆகிய இரண்டு சிறுவர்கள் கால்வாயில் மூழ்கியுள்ளனர். அவர்களின் உடல்களை உறவினர்கள் போராடி மீட்டுள்ளனர். சிறுவன் ஸ்ரீராமை அவனது பெற்றோர் அருகேயுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாகச் சொல்லவே, மகனின் உடலை எடுத்துச் செல்ல அவனது அப்பா ஆம்புலன்ஸ் ஓட்டுநரை அணுகியுள்ளார்.
பைக்கில் வைத்து
அதற்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநர், இறந்த உடலை இதில் எடுத்துச் செல்ல மாட்டோம் எனக் கூறியுள்ளார். தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் அதிக கட்டணம் கேட்டதால் வேறு வழியின்றி சிறுவனின் தந்தை, தனது மகனின் உடலை இருசக்கர வாகனத்தில் வைத்து வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளார்.
சிறுவனின் உடலை தந்தை பைக்கிலேயே எடுத்துச் சென்ற வீடியோ சமூக வலைதளத்தில் தீயாகப் பரவியது. இதையடுத்து ஆம்புலன்ஸ் ஊழியருக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஒரே வாரத்தில் அடுத்தடுத்து
முன்னதாக, ஆந்திர மாநிலம் திருப்பதியில் 1 வாரத்திற்கு முன்பு அரசு மருத்துவமனையில் உயிரிழந்த தனது மகனின் சடலத்தை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அதிக பணம் கேட்டதால் அவரது தந்தையே ஸ்கூட்டரில் எடுத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.
இதேபோல, ஆந்திர மாநிலம் கொத்தபள்ளி பகுதியைச் சேர்ந்த 2 வயது குழந்தை அக்ஷயா விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராவிதமாக அருகே இருந்த குட்டையில் விழுந்துள்ளார்.
ஆந்திராவில் அவலம்
குழந்தையை மீட்ட பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து வீட்டுக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸை அணுகியுள்ளனர்.
தனியார் ஆம்புலன்ஸில் அதிக கட்டணம் கேட்டதால் மகளின் உடலை பைக்கிலேயே வைத்து சிறுமியின் அப்பா சொந்த ஊருக்கு கொண்டு சென்றுள்ளார். ஒரு வாரத்திற்குள் ஆந்திராவில் இதேபோல மூன்று சம்பவங்கள் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அம்மாநில அரசை பலரும் விமர்சித்து வருகின்றனர்.