குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிப்பு- தமிழகத்தில் மழை தொடரும்!
சென்னை: வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிப்பதால் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் இன்றும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் பெய்துவருகிறது. இலங்கை அருகே வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி அது வலுப்பெற்று தாழ்வு பகுதியாக மாறியது. அது மேலும் தீவிரம் அடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்றே மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இனிமேல் அது வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி மண்டல இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது:
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இலங்கை அருகே தென்மேற்கு வங்க கடலில் நேற்று முன்தினம் தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக இருந்தது அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது.
அது இன்னும் 24 மணி நேரத்தில் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற உள்ளது. ஆனால் எந்த திசைக்கு செல்லும் என்று இப்போது கூறமுடியாது. அது போகும் திசையைப் பொருத்துதான் இனிமேல் பெய்யக்கூடிய மழை எந்த அளவுக்கு எங்கே பெய்யும் என்று சொல்ல முடியும்.
அது வடக்கு நோக்கி நகர்ந்துவிட்டால், தமிழ்நாட்டில் மழை குறையும். இன்று தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் பல இடங்களிலும், உள்மாவட்டங்களில் சில இடங்களிலும் மழை பெய்யும். சென்னையில் சில நேரங்களில் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications