ஐ.நா. நடத்திய ஆற்றல் சேமிப்பு போட்டி.. பதக்கம் வென்று அசத்திய அரசுப் பள்ளி மாணவி!
தேவகோட்டை: ஐக்கிய நாடுகள் சபை நடத்திய ஆற்றல் சேமிப்பு போட்டியில் வெற்றி பெற்று பதக்கம் மற்றும் கோப்பை வென்ரு அசத்தியுள்ளார் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி.
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சென்னை அக்னி கல்வி நிறுவனம் இணைந்து மாநில அளவில் நடத்திய முதல் ஆற்றல் சேமிப்பு போட்டியில் பங்கேற்று தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி காவியா மாநில அளவில் இரண்டாம் பரிசினை பரிசினை வென்றார்.
ஐக்கிய நாடுகள் சபையின் இந்தியாவிற்கான தேசிய தகவல் அலுவலர் ராஜீவ் சந்த்ரன் மற்றும் அக்னி கல்வி நிறுவனங்களின் செயல் இயக்குனர் அக்னீஸ்வர் மாணவி காவியாவுக்கு சென்னையில் நடைபெற்ற விழாவில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ், பதக்கம், கோப்பை ஆகியவற்றை வழங்கினார்கள்.

கூலி வேலை செய்யும் தாயார்
மாநில அளவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் பங்கு பெற்றதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டது. மாணவியின் தாயார் கூலி வேலை செய்து வருவதால் சென்னை அழைத்து செல்ல இயலாத நிலையில் பள்ளி ஆசிரியை முத்து மீனாள் போட்டிக்கு மாணவியை சென்னை அழைத்து சென்றார்.

முதல் முறையாக சென்னை பயணம்
இந்த மாணவி சென்னை செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரிய ,ஆசிரியைகள் வெற்றி பெற்ற மாணவியை பாராட்டினார்கள்.

பள்ளி அளவிலான சதுரங்க போட்டி
இதேபோல இப்பள்ளியில் பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டிகள் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தொடங்கி வைத்தார். நடுநிலைப் பள்ளி அளவில் இரண்டு பிரிவில் போட்டிகள் நடைபெற்றன. இதில் 11 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் 6ம் வகுப்பை சேர்ந்த மாணவர் கார்த்திகேயன் முதலிடத்தையும், அதே வகுப்பு மாணவர் சஞ்சீவ் இரண்டாம் இடத்தையும், பெண்கள் பிரிவில் 6 வகுப்பு மாணவி காயத்ரி முதல் இடத்தையும் ,அதே வகுப்பை சார்ந்த மாணவி நித்தியகல்யாணி இரண்டாம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.

வட்டார போட்டிகளுக்குத் தகுதி
14 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவில் ஆண்களுக்கான பிரிவில் 8ம் வகுப்பு மாணவர் ஜீவா முதல் இடத்தையும், அதே வகுப்பை சேர்ந்த மாணவர் ராஜேஷ் இரண்டாம் இடத்தையும், பெண்களுக்கான பிரிவில் 8ம் வகுப்பு மாணவி தனலெட்சுமி முதல் இடத்தையும், அதே வகுப்பை சார்ந்த ராஜேஸ்வரி இரண்டாம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர். போட்டிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் கருப்பையா செய்திருந்தார். வட்டார அளவில் நடைபெறும் போட்டிகளுக்கு இவர்கள் தகுதி பெற்றவர்கள் ஆவார்கள்.












Click it and Unblock the Notifications