தொடர்ந்து 4-வது ஆண்டாக தேவகோட்டை பள்ளி மாணவ, மாணவிகள் களப்பயணம்
தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவிகள் கல்லூரி ஆய்வகங்களுக்கு அறிவியல் ஆய்வக களப்பயணம் மேற்கொண்டனர்.
தேவகோட்டை: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி 8ம் வகுப்பு மாணவர்கள் அறிவியல் ஆய்வக களப் பயணமாக ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரிக்கு சென்று ஆய்வகங்களை ஆர்வமாக பார்வையிட்டனர்.
4-வது ஆண்டாக களபயணம்
இப்பள்ளி 8ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் தொடர்ந்து நான்காம் ஆண்டாக கல்லூரி ஆய்வக சோதனை கூடங்களுக்கு நேரில் களப் பயணம் மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆய்வக களபயணம் வந்தவர்களை கல்லூரி விலங்கியல் துறை பேரா. நாவுக்கரசர் வரவேற்றார்.கல்லூரி முதல்வர் (பொறுப்பு) விஜயன் தலைமை தாங்கினர்.விலங்கியல் துறை தலைவர் பேரா.முகமது ரபீக் ராஜா,வேதியியல் துறை தலைவர் பேரா.காஜா மொஹைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விலங்கியல்,தாவரவியல் துறை
களப்பயணத்தின் தொடக்கமாக மாணவ,மாணவியர் விலங்கியல் துறையில் ஒரு செல் உயிரியிகளிலிருந்து பல செல் உயிரிகள் வரையும்,முதுகெலும்பற்றவைகளான புரோட்டோசோவா தொகுதியை சார்ந்த அமீபா ,பாரமீசியம் ,பிளாஸ்மோடியம்,பவளப்பாறைகள்,அஸ்கல்மன்திஸ் ,ஆர்த்ரோபோடா,ஆக்டோபஸ்,ஸ்டார் பிஷ்,சங்கு,சிப்பி,இறால்,நத்தை,முதுகெலும்பு உள்ளவைகளில் கடல் குதிரை,பச்சோந்தி,பல்லி, ஆமை, மீன் வகைகள்,இருவாழ்விகளான தவளை, ஊர்வனவற்றில் பாம்பு வகைகளான விஷப்பாம்புகள்,விஷமில்லாப் பாம்புகள்,நல்லபாம்பு,ராஜநாகம்,பச்சைப்பாம்பு,ஓணான்,பறப்பனவற்றில் புறா,காகம்,மைனா ,மரங்கொத்தி,மீன் கொத்தி ஆகியவை உடல் உறுப்புகளின் எலும்புகளுடனும்,பாலூட்டிகலில் முயல்,பன்றி,எலி மற்றும் அவைகளின் கரு போன்றவைகளையும் ,எலும்பு வகைகள்,மனித இதய மாதிரி,டி என் ஏ ,ஆர் என் ஏ மாதிரிகளையும்,மைட்டோகாண்ட்ரியா ,மனித எலும்பு மண்டலம் தொடர்பான மாதிரியையும்,கரு உருவாவதை நுண்ணோக்கி வழியாகவும் பார்த்தும் அதன் பயன்களை கேட்டும் அறிந்து கொண்டனர்.ரத்த வகை கண்டறிதல் எவ்வாறு நடைபெறுகிறது, அதன் அர்த்தங்கள் என்ன ,அதன் வகைகள் என்ன என்பன போன்ற தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.
தாவரவியல் துறை
தாவரவியல் துறையில் மூலிகை தோட்டத்தில் டெரிடொ பைட்டுகள்,பிரையொ பைட்டுகள் என தாவரங்களின் வகைகளையும்,நுண்ணோக்கிகள் மூலம் தாவரத்தின் மகரந்தப்பை,சூல்பைகளையும் பார்வையிட்டும் அதன் பயன்பாடுகளையும் அறிந்து கொண்டனர்.
மூலிகை தோட்டம்
மூலிகை தோட்டம் சென்றுமலேசியன் திப்பிலி, அம்மான் பச்சரிசி, சிறுநங்காய், முடக்கத்தான், முப்பிரண்டை, கரிசலாங்கண்ணி, நொச்சி, வசம்பு , ஓமவல்லி, ஆடாதொடா, தவசி முருங்கை, மஞ்சள், மணத்தக்காளி, பெரியநெல்லி, தும்பை, அருகம்புல், சங்குபூ,செம்பருத்தி,குப்பைமேனி உட்பட பல்வேறு மூலிகை செடிகளை நேரடியாக பார்த்தும் அதன் பயன்களை அறிந்தும், அது எவ்வாறு மனிதர்களுக்கு உதவியாக உள்ளது என்பதையும் தெளிவாக எடுத்து கூறினார்கள்.தாவரவியல் விஞ்ஞானிகளை படங்களின் மூலமாக அவர்களின் கண்டுபிடிப்புகளை பார்வையிட்டும் பயன்பெற்றனர்.தாவரவியல் துறை பேரா.வீரலெட்சுமி அனைத்து வகை மூலிகை செடிகளையும் விளக்கி கூறினார்.
வேதியியல் ஆய்வகம்
வேதியியல் ஆய்வகத்தில் உப்பு தொடர்பான சுடர் சோதனைகள்,பருமனரி பகுப்பாய்வு செய்து காட்டல் ,ஆய்வக உபகரணங்களான கூம்பு குடுவை,பியூரெட்,பீப்பெட்,சோதனை குழாய்,கண்ணாடி தட்டு,உப்பு எடுக்கும் கரண்டி,கண்ணாடி கலக்கி, புன்சென் அடுப்பு , நிற மாற்றத்தை சரியாக காட்டும் போர்செளின் டை , 200 மி.லி.பீக்கர் ,வீழ்படிவு சேகரிக்கும் சோதனை குழாய் போன்றவற்றையும்,நடுநிலையாக்கல் வினைகளையும்,வீழ்படிவு எவ்வாறு நடைபெறுகிறது என்பதையும் அதற்கான உபகரணங்கள் எப்படி செயல்படுத்த படுகிறது என்பதையையும் நேரடியாக செய்து காட்டல் மூலம் கற்று கொண்டனர். மாணவர்களும் நடுநிலையாக்கள் வினைகளை அவர்களே செய்து பார்த்து அதன் முடிவு நிலைகளை தெரிந்து கொண்டனர்.மேலும் உப்புக்கள் கண்டறிதல் சோதனைகளை அதன் நிறங்கள் புன்சன் அடுப்பில் காண்பிக்கும்போது எவ்வாறு மாறுகிறது என்பதையும் ,அதன் மூலம் அவற்றை எவ்வாறு கண்டுபிடிக்க முடியும் என்பதையும் அவர்களே செய்து பார்த்தனர்.
இயற்பியல் ஆய்வகம்
இயற்பியல் துறையில் காந்தங்கள்,வான்நோக்கி,மின்நோக்கி,தனி ஊசல்,நிறப்பிரிகை,ஆடிகள்,திருகு அளவி,ஊசல் கடிகாரம்,எதிரொலிப்பு மற்றும் நேனோ தொழில் நுட்பங்கள் போன்றவை நேரடியாக செய்து காண்பித்தும் மாணவர்களால் செய்தும் பார்க்கப்பட்டது.கணினி துறையில் எவ்வாறு கணினியை இயக்குவது,அதில் உள்ள முக்கிய பகுதிகள் என அனைத்துக்கும் விரிவாக நேரடியாக செயல் விளக்கங்கள் மாணவ,மாணவியர்க்கு விளக்கப்பட்டது.
கல்லூரி நூலகம்
கல்லூரியின் நூலகத்தை நூலகர் உதவியுடன் மாணவர்கள் பார்வையிட்டனர்.எவ்வாறு ஒவ்வொரு புத்தகமும் பாட வாரியாக அடுக்கப் பட்டுள்ளது ,அதனை எவ்வாறு நாம் எளிதாக எடுத்து படிக்க இயலும், நூலகம் எவ்வாறு பயன் படுத்த வேண்டும் என்பது தொடர்பாக விரிவாக எடுத்து கூறினார்.மாணவர்கள் மகிழ்ச்சியுடன் சிறிது நேரம் கல்லூரி நூலகதில் அமர்ந்து படித்து பார்த்தனர்.
பள்ளி மாணவியின் பேச்சு
ஆய்வக களப்பயணம் குறித்து நிறைவாக மாணவி தனலெட்சுமி பேசுகையில் கல்லூரியில் படித்தால் கூட ஒரு துறை பற்றி மட்டும்தான் அறிய முடியும்.ஆனால் 8ம் வகுப்பு படிக்கும்போதே நாங்கள் கல்லூரியில் உள்ள அனைத்து அறிவியல் துறைகளையும் அறியும் வாய்ப்பை பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்றார்.
மாணவர்கள் ஜெனிபர்,விஜய்,செந்தில்,பார்கவி லலிதா ,ராஜேஷ், விக்னேஷ்,உமா மகேஸ்வரி,காவியா,ஜீவா,சங்கீதா,தனலெட்சுமி ஆகியோர் பல்வேறு சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் நன்றி கூறினார்.
களப்பயணத்திற்கான ஏற்பாடுகளை ஆசிரியை செல்வமீனாள் மற்றும் ஆசிரியர் ஸ்ரீதர் ஆகியோர் செய்திருந்தனர்.