ஆடிப்பெருக்கு: காவிரித்தாயை வணங்கிய பெண்கள்– புதுத்தாலி அணிந்து உற்சாகம்
திருச்சி: ஆடிப்பெருக்கை முன்னிட்டு, காவிரிக் கரையோர பகுதிகளில் புதுமணத் தம்பதியர், பெண்கள் உட்பட ஏராளமான மக்கள் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். திருச்சி அம்மா மண்டபம், படித்துறை உள்ளிட்ட இடங்களில் குவிந்த ஆயிரக்கணக்கானோர், காவிரி தாய்க்கு சிறப்பு வழிபாடு நடத்தினர். சுமங்கலி பெண்கள் தாலி பாக்கியம் நிலைக்க புது மஞ்சள் கயிற்றை கட்டிக்கொண்டனர்.
டெல்டா மாவட்டங்களின் ஜீவநாடியாக விளங்கும் காவிரித்தாயை ஆடிப்பெருக்கு தினத்தன்று வணங்கி வழிபடுவது காலங்காலமாக நடைபெற்று வருகிறது. காவிரி டெல்டா மாவட்டங்கள் தவிர, திருப்பூர், கோவை ஆகிய கொங்கு மாவட்டங்களிலும் ஆடிப்பெருக்கு விழா, சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
ஆடிப்பெருக்கு நாளில் திருமணம் ஆகாதவர்கள், தங்களுக்கு நல்ல வரன் கிடைக்க வேண்டும், என்று வழிபாடு நடத்துவர். ஆடிப்பெருக்கு அன்று, முளைப்பாரி, கருகமணி, வெற்றிலை, பாக்கு, அரிசி, வெல்லம் வைத்து, பெண்கள் ஒருவருக்கு ஒருவர் மஞ்சள் கயிறு அணிந்து, வாழ்வு சிறக்கவும் வேண்டிக் கொள்வர். ஆறுகள் இல்லாத பகுதிகளில் ஓடும் வாய்க்கால்கள், கிணறுகள், அடிபம்புகள் ஆகியவற்றில் மங்களப் பொருட்கள் வைத்து மக்கள் வழிபாடு நடத்துவர்.

பொங்கி வரும் காவிரி
ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடும் வகையில் ஜூலை 25 முதல், விநாடிக்கு, 6,000 கனஅடி, தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த தண்ணீர், டெல்டா மாவட்டங்களை நேற்று சென்று சேர்ந்தது. ஆற்றில் பொங்கி வந்த காவிரி புதுப்புனலை உற்சாகத்துடன் கண்டு வணங்கினர்

ஆடி 18ம் நாள்
தமிழ் மாதங்களில் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்ற பெருமைக்குரியதாகும். இதன் காரணமாக ஆடி மாதம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் சிவன், பார்வதி வீற்றிருக்கும் சிவாலயங்கள் மற்றும் அம்மன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபடுவது வழக்கமான ஒன்றாகும். ஆடி மாதம் 18ம் தேதியை ஆடிப்பெருக்கு விழாவாக கொண்டாடப்படுகிறது.

காவிரி கரையில் கொண்டாட்டம்
ஆடிப்பெருக்கு தினமான இன்று அம்மா மண்டபம் படித்துறையில் அதிகாலையில் இருந்தே எராளமானோர் குவிந்தனர். புதுப்பெண்கள் பட்டுச்சேலை அணிந்து கொண்டும், புது மாப்பிள்ளைகள் பட்டு வேஷ்டி, பட்டுச்சட்டை அணிந்து கொண்டும் வந்து காவிரி ஆற்றின் படிக்கட்டுகளில் வாழை இலை போட்டு அதில் காப்பரிசி, தேங்காய், வாழைப்பழம், புதிய மஞ்சள் கயிறு, காதோலை, கருகமணி உள்பட பொருட்களை வைத்து தீபம் ஏற்றி காவிரி தாய்க்கு பூஜை செய்தனர்.

தாலி பாக்கியம் நிலைக்க
சுமங்கலிப்பெண்கள் புதுத்தாலிகளை மாற்றிக்கொண்டனர். இதோபோல புது மணப்பெண்ணுக்கு உறவினர்கள் புடைசூழ புதுதாலியை பெருக்கிப் போட்டனர். திருமணத்தின் போது அணிந்து இருந்த மாலைகளை வாழை இலை, மூங்கில் கூடைகள் ஆகியவற்றில் வைத்து காவிரி ஆற்றில் விட்டனர். கன்னிப்பெண்கள் தங்களுக்கு நல்ல மாப்பிள்ளை அமைய அரச மரம் மற்றும் வேப்ப மரங்களில் சந்தனம், மஞ்சள் பூசி மஞ்சள் கயிறுகளை மரத்தில் கட்டி குங்குமம் இட்டனர்.

தஞ்சை - கொள்ளிடம்
தஞ்சை, திருவையாறு பகுதிகளில் ஆறுகளில் தண்ணீர் இல்லாததால் ஆடிப்பெருக்கு விழா களை இழந்து காணப்பட்டது. திருவையாறில் காவிரி மண்டப படித்துறையில் குளிப்பதற்காக பம்புசெட் போடப்பட்டு இருந்தது. அதில் புதுமணத்தம்பதிகள் புனித நீராடி திருமணத்தின் போது அணிந்த மாலைகளை தண்ணீரில் போட்டனர். புதுமணத்தம்பதிகள் காவிரி தாய்க்கு படையல் போட்டு வழிபட்டார்கள்.

கொள்ளிடம் ஆற்றங்கரையில்
சிதம்பரம், மயிலாடுதுறை, சீர்காழி, உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான புதுமண தம்பதிகள் குடும்பத்துடன் காலை 6 மணி முதல் கொள்ளிடம் ஆற்றங்கரையில் திரண்டனர். ஆற்று மணலில் கோலம்போட்டு, களிமண்ணில் விநாயகர் சிலை உருவாக்கினர். சிலைகளுக்கு ஆப்பிள், பேரிக்காய், வாழைப்பழம் போன்ற பழங்கள், நெய் விளக்கு, சுண்டல் மற்றும் பூஜை செய்தனர்.

பவானி கூடுதுறை
ஈரோடு மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா பவானி கூடுதுறையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விவசாயிகள் நிலத்துக்கு தண்ணீர் தரும் காவிரித்தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முளைப்பாரிகள் எடுத்து வந்தனர். புதுமண தம்பதிகள், கூடுதுறை காவிரியில் புனித நீராடி, பவானி சங்கமேசுவரர்- வேதநாயகி அம்மனை வழிபட்டனர். திருமணத்துக்கு அணிந்திருந்த பூமாலைகளை காவிரியில் விட்டு வணங்கினார்கள். தமிழகம் முழுவதும் நீர் நிலைகள் உள்ள பகுதிகளிலும், ஆறுகள் ஓடும் பகுதிகளிலும் ஆடிப்பெருக்கு உற்சாகமாக கொண்டாப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications