சங்கரன்கோவிலில் சாமி தரிசனத்திற்கு கட்டுபாடு... பக்தர்கள் உள்ளிருப்பு போராட்டம்!
சங்கரன்கோவிலில் சாமி தரிசனம் செய்ய கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் பக்தர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி : சங்கரன்கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு கட்டுபாடு விதிக்கப்பட்டதால் அவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென் மாவட்டத்தில் புகழ் பெற்ற கோயில்களில் சங்கரன்கோவில் சங்கர நாராயண சாமி கோவிலும் ஒன்றாகும். இங்கு நடக்கும் ஆடி தபசு காட்சியை காண்பதற்கு பல்வேறு மாவட்டத்தில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் கூடுவர். அப்போது சாமி, அம்பாள் சன்னதியில் பொது தரிசனத்துடன், கட்டண தரிசனமும் அமுல்படுத்தப்படும்.
சிறப்பு தரிசனத்திற்கு ரூ.10 வசூலித்த பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். இதில் காலையில் நடைபெறும் திருவனந்தல் மற்றும் இரவு நடைபெறும் பள்ளியரை பூஜைகளுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் அதிக அளவில் வருவது வழக்கம். அவர்கள் கோயில் அம்மன் சன்னதி படி முன்பு அமர்ந்து தரிசனம் செய்வர். இந்நிலையில் கோயில் துணை ஆணையராக பொறுப்பேற்ற செல்லத்துரை சில மாற்றங்கள் செய்தார்.
இதில் காலை, பள்ளியறை தரிசனத்தை அனைவரும் பொது தரிசனத்தில்தான் பங்கேற்க வேண்டும் என்று மாற்றம் செய்தார். இதனால் அம்பாள் சிறப்பு கட்டண வாசலை பூட்டி விட்டனர். இதை அறியாத பக்தர்கள் சிறப்பு கட்டணத்தில் அனுமதி கேட்டு கோயில் நிர்வாகத்திடம் முறையிட்டனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் மாலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவில் முன்பு படியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சங்கரன்கோவில் போலீசார் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் கோயில் துணை ஆணையரிடம் பேசி மாற்றங்களை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதால் பக்தர்கள் தற்காலிகமாக கலைந்து சென்றனர்.