37 வருசம் சார்..பேசும் போதே குழந்தை போல் உடைந்து அழுத எஸ்ஐ.. சமாதானம் செய்த காவலர்கள்
தருமபுரி: 37 வருசம் வேலை பார்த்துட்டேன் சார் போகவே மனசு இல்லை. பேசும் போதே குழந்தை போல் உடைந்து அழுதுள்ளார் எஸ்ஐ கணேசன். ஓய்வு பெறும் நாளில் அவரை சமாதானம் செய்து வைத்து பென்னாகரம் காவலர்கள் பிரியா விடை கொடுத்து அனுப்பி வைத்தனர்.
ஒரு இடத்தில் வேலை பார்த்துவிட்டு அங்கிருந்து பிரிந்து சென்றாலே மனம் வலிக்கும். பல வருடம் ஒரே இடத்தில் வேலை பார்த்துவிட்டு ஓய்வு பெறுபவர்கள் தங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய விஷயத்தை இழந்துவிட்டு செல்வது போன்று உணருவார்கள்.

பல வருடம் தன்னுடன் வேலைபார்த்தவர்களை நாளை முதல் பார்க்க முடியாது. தான் உட்கார்ந்த இடத்தில் இனி உட்கார முடியாது. தன்னுடன் நண்பர்களாக இருந்தவர்களுடன் இனி வேலைபார்க்க முடியாது. ஓய்வு பெற்ற பின் என்ன செய்ய போகிறோம். பிள்ளைகளின் திருமணம், பிள்ளைகளின் உயர்கல்வி, ஓய்வு காலத்தில் எப்படி வாழ்வது என்று பல்வேறு கேள்விகளுடன், பிரிந்து செல்லும் அரசு ஊழியர்களின் வலி நிச்சயம் சொல்ல இயலாத துயரம் தான்.
மே 31ம் தேதியான நேற்று தமிழகத்தில் பல்வேறு அரசு துறை பணியாளர்கள் ஓய்வு பெற்றார்கள். அப்படி ஓய்வு பெற்றவர்களின் நெகிழ்ச்சியான பிரியான விடை சந்திப்பு நாளாக மே 31 ம்தேதி அமைந்திருந்தது. தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த எஸ்ஐ கணேசன் பணி ஓய்வுபெற்றார் அவருக்கு பிரியா விடை கொடுத்து காவலர்கள் அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக தருமபுரி மாவட்டம் பென்னாரகம் எஸ்ஐ கணேசன் பேசும் போது, காவல் ஆய்வாளர் அவர்களுக்கும், என்னுடன் பணியாற்றி காவலர்கள் அனைவருக்கும் நன்றி. 37 வருடம் பணியாற்றிவிட்டு நான் இன்று (நேற்று) பிரிந்து செல்கிறேன் (கண்ணீருடன் பேச முடியாமல் தவித்தார்) .
இது நாள் வரை என்னுடன் குடும்பமாக இருந்து ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கு நன்றி என்றார். அவரை மனம் தேற்றிய காவலர்கள், அவருடன் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டு அவருக்கு பாராட்டு விழா நடத்தி,வழி அனுப்பி வைத்தனர். கண்ணீருடன் எஸ்ஐ விடை பெற்றார்.













Click it and Unblock the Notifications