நம்பி வந்தவரை நட்டாற்றில் விட்டுட்டாரே... புலம்பும் ஆதரவாளர்கள் - மீண்டும் தர்மயுத்தம்?
தர்மயுத்தம் நடத்தியவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர் அவரது ஆதரவாளர்கள். நம்பி வந்த தங்களை நட்டாற்றில் விட்டுவிட்டதாக புலம்பி வருகின்றனர்.
சென்னை: துணை முதல்வரை நம்பிவந்த எம்.பி, எம்.எல்.ஏக்களும் கடும் அதிருப்தியில் இருக்கிறார்களாம். தர்மயுத்தம் நடத்தியவருக்கு எதிராகவே ஒரு யுத்தம் நடத்தப் போகிறார்களாம்.
தர்மயுத்தம் நாயகன் முகாமிற்குள் தற்போது நிஜமாகவே போர்க்களத்திற்கு இணையான சூழல்தான் நிலவுகிறது.

சசி, தினகரனுக்கு எதிராக ஓபிஎஸ் பின்னால் ஆக்ரோஷமாக அணிதிரண்டவர்கள் இப்படி நம்ப வெச்சு கழுத்தை அறுத்துவிட்டாரே என இப்போது புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை கிரீன்வேஸ் சாலை வீட்டிற்கு நாள்தோறும் பெரும் கூட்டம் படையெடுத்ததுண்டு. ஆனால் இப்போது அவரது இல்லம் ஆள் அரவமற்று வெறிச்சோடிக் காணப்படுகிறது. ஆரம்பத்தில் முனகலாக வெளிப்பட்ட அதிருப்தி, தற்போது ஒரு உள்நாட்டுச் சண்டையை உருவாக்கும் அளவிற்கு பூதாகரமாக மாறியுள்ளது.
தொடக்கம் முதல் அவருடன் நெருக்கம் பாராட்டி வந்த அந்த தென்மாவட்ட பிரமுகர், இந்த விஷயம் பற்றி பேச ஆரம்பித்ததும் நடுத்தெருவில் நிறுத்திவிட்டார் அவர் என்று கொதித்தார்.
"மன்னார்குடி கும்பலின் பிடியிலிருந்து அதிமுகவை விடுவிக்க வேண்டும் என்கிற ஒரே நோக்கத்திற்காக மட்டுமே என்னைப் போன்றவர்கள் அவரின் பின்னால் திரண்டோம். அந்த நோக்கம் முழுமையாக நிறைவேறியிருக்கிறதா என்பது பற்றி இப்போது என்னால் தெளிவாக எதையும் கூற இயலவில்லை. ஆனால், மீண்டும் பதவியில் அமர்வது என்ற அவரது நோக்கம் மட்டும் நிறைவேறியிருக்கிறது. ஆனால் அவரை நம்பிச் சென்றவர்கள் கதி? மொத்தத்தில் அவர் ஒரு சுயநலவாதி என்பது இப்போது புரிகிறது என்கிறார் கோபம் கொப்பளிக்க.

டெல்லியின் கண்ணசைவில் எடப்பாடியுடன் ஒட்டு வேலைகள் ஆரம்பமான காலக்கட்டத்தில் , 'உடனிருக்கும் எங்களுக்கு அவரவர் தகுதிக்கேற்ப பொறுப்புகள் கிடைப்பதை உறுதி செய்யுங்கள்' என அவரிடம் சொல்லாதவர்கள் வெகு சொற்பமே.
அந்த சமயத்தில் எல்லாம் "உங்களுக்கான பொறுப்புகளை உறுதி செய்த பிறகுதான் இணைப்பே நடக்கும்" என உருகினாராம். ஆனால் அந்த இந்த உறுதிமொழிக்கு மாறாகவே காட்சிகள் அரங்கேறின.
இணைப்பிற்கு பலனாக அவருக்கு துணை முதல்வர் பதவியும், அவருடன் கடைசி நேரத்தில் ஒட்டிக்கொண்ட மாபா பாண்டியராஜனுக்கு பறிக்கப்பட்ட அமைச்சர் பதவியும் கிடைத்ததே தவிர, அவரது அணியைச் சேர்ந்த வேறு எவருக்கும் சொல்லிக்கொள்ளும்படியான பொறுப்புகள் எதுவும் வழங்கப்படவில்லை.

இது பற்றி சம்மந்தப்பட்டவர்கள் கேட்டபோதெல்லாம் தனது வழக்கமான டிரேட் மார்க் அசட்டுச் சிரிப்பையே பதிலாகத் தந்திருக்கிறார் துணைமுதல்வர். இந்த வகையில், செம்மலை தொடங்கி கே.பி முனுசாமி, பி.ஹெச்.பாண்டியன், மனோஜ் பாண்டியன், மைத்ரேயன் தவிர, துணை முதல்வரை நம்பிவந்த எம்.பி, எம்.எல்.ஏக்களும் கடும் அதிருப்தியில் இருக்கிறார்களாம்.
இணைப்புக்கு முன்பும் சரி, இணைப்பிற்கு பிறகும் சரி அவருடன் நெருக்கமாக இருந்த எங்களை அமைச்சர்களும், அதிகாரிகளும் சுத்தமாகக் கண்டுகொள்வதில்லை. ஒரு சின்ன காரியத்தைக் கூட செய்ய முடியவில்லை. இதனால் குடும்பத்தினர் கூட ரொம்ப கேவலமா பேசறாங்க.
இதையெல்லாம் துணை முதல்வரிடம் போய் சொன்னால் எந்த ரெஸ்பான்சும் இல்லை. தன்னோட காரியங்களை மட்டும் கச்சிதமா பார்த்துக்கொள்கிறவர், எங்களைத்தான் அம்போன்னு விட்டுவிட்டார் என பொங்கினார் அவரின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் ஒருவர்.
தொடக்கத்தில் ஏதோ கொஞ்சம் நம்பிக்கையுடன் இருந்தவர்கள், இனி அவரை நம்பி பிரயோஜனம் இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார்களாம். கலகலத்துப் போயிருக்கும் ஓபிஎஸ் முகாமிலிருந்து ஒரு பிரிவினர் முதல்கட்டமாக பாஜகவிற்குத் தாவ நாள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
இதற்கிடையே நான் யாருக்கும் கெடுதல் பண்ணவில்லை. டெல்லி பேச்சைக் கேட்ட எனக்குத்தான் எடப்பாடி கெடுதல் பண்றாரு. ஆட்சியைப் பொறுத்தவரை நான் வெறும் டம்மி பீஸ்தான். எனக்கே எந்த அதிகாரமும் கிடையாது. இதில் நான் யாருக்கு என்ன செய்ய முடியும்? என நெருக்கமான வட்டாரங்களில் துணை முதல்வர் புலம்புவது தனிக்கதை. தர்மயுத்தம் நடத்தியவருக்கு எதிராகவே தர்மயுத்தம் நடத்த தயராகி வருவதுதான் வேடிக்கை.












Click it and Unblock the Notifications