துரோக கும்பலான ஈபிஎஸ் - ஓபிஸ்க்கு ஏஜெண்டாக செயல்படும் திவாகரன்: டி.டி.வி தினகரன்
துரோகக் கும்பலான ஈபிஎஸ் - ஓபிஸ்க்கு திவாகரன் ஏஜெண்டாக செயல்பட்டு வருகிறார் என்று டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.
சேலம் : துரோகக் கும்பலான ஈபிஎஸ் - ஓபிஎஸ் அணிக்கு திவாகரன் ஏஜெண்டாகச் செயல்பட்டு வருகிறார். விரைவில், இவர்களிடம் இருந்து தமிழகத்தை மீட்போம் என்று அமமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளரும், ஆர்கே நகர் சட்டசபை உறுப்பினரான டி.டி.வி தினகரன் இன்று சேலத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், கர்நாடகத் தேர்தல் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் மதவாத சக்திகளின் ஆதிக்கம் இனி தடுக்கப்படும்.
18 எம்.எல்.ஏ.,க்கள் விவகாரத்தில் இரு தரப்பு வாதங்களையும் நீதிபதிகள் கேட்டுள்ளனர். அதற்கான தீர்ப்பு விரைவில் வெளியாகும். அதன் மூலம் தமிழ்நாடு தவறானவர்கள் கைகளில் இருந்து மீட்கப்படும்.
தனது முன்னாள் மாமா திவாகரனுக்கும் தனக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. அவர் துரோகக் கும்பலான ஈபிஎஸ் - ஓபிஎஸ் இருவருக்கும் ஏஜெண்டாகச் செயல்படுவதாலேயே இவ்வாறு பேசி வருகிறார். இந்த தவறை அவர் விரைவில் உணர்வார் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சேலத்தில் இருந்து சென்னை வரை பசுமை வழிச்சாலை அமைப்பது, எடப்பாடி பழனிசாமிக்கும் அவரது அமைச்சரவை சகாக்களுக்கும் நல்ல லாபம் தரும் என்பதாலேயே அந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.